சம்மாந்துறை அன்சார்.
கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், அங்கு வசிக்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (ஏப்ரல் 19) மிகவும் மகிழ்வான முறையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பானது, சம்மாந்துறையின் தற்போதைய நிலைவரங்கள், சமூகத்தின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆழமாக ஆராயும் ஒரு சிறந்த களமாக அமைந்தது.
மேலும் இச் சந்திப்பில் சம்மாந்துறை சமூகம் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதோடு, பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் தவிசாளர் விளக்கமளித்தார்.
சம்மாந்துறையின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனுக்கும் புலம்பெயர் உறவுகளாகிய நாம் எவ்வாறு தொடர்ச்சியான பங்களிப்புக்களை வழங்க முடியும் என்பது குறித்த ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இந்த சந்திப்பின் இறுதியில், ஊரின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக, தவிசாளருடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவதிலும், ஊரின் வளர்ச்சிப் பாதையில் ஒன்றிணைந்து பயணிப்பதிலும் தாம் உறுதியாக இருப்பதாக கனடாவில் வாழும் சம்மாந்துறை மக்கள் தெரிவித்தனர்.



