பாறுக் ஷிஹான்.
கட்டிலில் தன்னுடன் உறங்கிய மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24ம் திகதின்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்களூடாக (IMO /WHATSAPP) திருமணமான பெண்ணொருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்.
அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார். அப்பெண்ணிற்கு ஆண் (வயது 18), பெண் (14) என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இதன் போது அப்பெண் சமூக வலைத்தளமூடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது பிள்ளையை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு சந்தேக நபரான 50 வயது கள்ளக்காதலனைச் சந்தித்துள்ளார். இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் வாடகைக்கு வீட்டினை கிராம சேவகரின் உதவியூடாகப் பெற்று அங்கு தங்கியிருந்துள்ளனர்.
குறித்த வாடகை வீட்டில் வைத்தே தாயின் ஒத்துழைப்புடன் 14 வயதுச்சிறுமி கள்ளக்காதலனால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அச்சிறுமி அபயக்குரல் எழுப்பி கத்திய போது தாய் உடனடியாகச்செயற்பட்டு சிறுமியின் வாயினை பலவந்தமாக மூடியதுடன், கள்ளக்காதலனுக்கு ஒத்தாசை செய்துள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் சுமார் 3 மாதங்களின் பின்னர் தலைமைறைவாகி இருந்த 50 வயதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலங்குளம் பகுதியில் 03.06.2026ம் திகதியன்று கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணையின் பிரதான சந்தேக நபரான கள்ளக்காதலன் உட்பட குறித்த செயற்பாட்டிற்கு கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ.ஆதம்பாவா (44138) மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளிமாவட்டம் ஒன்றிலுள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையமொன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

