(எம்.எம்.ஜபீர்)
பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு சிறந்த முறையில் தீர்வை கண்டு கொள்வதற்காக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத பங்களிப்பு நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது ஒரு வரப்பிரசாதமாகும். ஆகையால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சிறந்த ஆளுமைமிக்க பெண் சமூகத்தினை போட்டியிடச் செய்வதற்கு பிரதேச மகளிர் சங்கங்களின் பங்கு மிக அவசியமானதமாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக மகளிர் சங்கங்களின் பிரதிநிகளுக்கான கலந்துரையாடல் சம்மாந்துறை விளினியடியில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களை இருந்ததை போலல்லாது தற்போது செயற்பட்டுவரும் மகளிர் சங்கங்களில் சிறந்த ஆளுமைமிக்க இளம் பெண்கள் மகளிர் சங்களை சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றனர் இவ்வாறான பெண்கள் தங்களின் பிரச்சினைகளை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கக்கூடியவர்கள் முன்வருவதன் மூலமும் அவர்களுக்கு பின்னால் பக்கபலமாக இருந்து பெண் சமூகத்தின் பிரச்சினைகளை கொண்டு செல்வதற்கு முன்வந்து தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலமும் தான் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பெண்களின் பிரச்சினைகளை பெண்களாலேயே முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 25 சதவீதத்தினை பெண்களின் பிரநித்துவத்திற்காக வழங்கியது மட்டுமல்லாமல் கட்டாயமாக்கப்பட்டிருப்பதும் மிகவும் வரவேற்கத் தக்கவிடயமாகும் இதில் பெண்களின் பங்கு மிகவும் அவசியமாகும் இதனை இப்போதை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் உங்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக வந்து செல்லுகின்றனர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமீன் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் சம்மாந்துறை நகர அபிவிருத்தி, வீதிகள், வடிகான்கள், சிறுவர் பூங்காக்கள், கட்டடங்கள் போன்ற மேலும் பல அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் பல ஆரம்பிக்கப்படவுள்ளன. முஸ்லிம்களின் அதிக படியான செல்வாக்கைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்று உள்ளுராட்சி மன்றத்தை வெற்றி கொண்டு ஆட்சியமைக்க மகளிர் சங்களின் பங்கு அதிகளவில் இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.