Ads Area

சாப்பிடும் போது வாயை மூடிச் சாப்பிடவும் (குழப்பமாக உள்ளதா..? முழுதும் வாசியுங்கள்)


உண்ணுதல் என்பது கடமை. சாப்பிட கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசிக்காத போது சாப்பிடவே கூடாது. நின்றபடி சாப்பிடுதல், தொலைகாட்சி பார்த்தபடி சாப்பிடுதல், பேசிக்கொண்டே சாப்பிடுதல் கூடவே கூடாது.
உணவை ஒரு கவளம் வாயில் வைத்தவுடன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வாயை மூடி மெல்லும் போது உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். வாயை திறந்து திறந்து மென்றால் காற்று உள்ளே போய் உமிழ்நீர் சுரப்பதை தடுத்துவிடும். வாயை நன்றாக மூடி ஒரு கவளம் உணவை மெதுவாக மெல்ல வேண்டும். உமிழ்நீர் பெருகும். உணவு கரையும். அப்போது தான் உணவை விழுங்க வேண்டும். இதே போல அடுத்த கவளம் உணவை சாப்பிட வேண்டும்.

ஜீரணத்தின் முதல்படி வாயில் தான் ஆரம்பிக்கிறது. வாயை மூடி மெல்லும் போது சுரக்கும் உமிழ்நீர் தான் உணவு வரப்போகிறது என்ற சிக்னலை வயிற்றுக்கு அனுப்புகிறது. சரியாக மென்று திங்காமல் விழுங்கும் உணவுகள் வயிற்றுக்கு செல்லும் போது வயிற்றின் வேலை அதிகரிக்கும். அது தேவையற்ற வயிறு உப்பசம், எரிச்சல், வயிற்று கடுப்புகளை உருவாக்கிவிடும்.


வாயை மூடியபடி உணவை மெல்ல வேண்டும். இப்படி இதுவரை சாப்பிடாதவர்கள் இதை பழகும் போது இரண்டொரு நாட்களுக்கு கன்னம் வலிக்கும். பழகிவிட்டால் சரியாகிவிடும். ஏனெனில் இதுவே சாப்பிடக்கூடிய முறையாகும். இப்படி சாப்பிடும் போது சுரக்கும் உமிழ்நீர் மிக மிக பயனுள்ளது. இதன்காரணமாக வயிற்றின் வேலை மிக மிக எளிமையாகும். கல்லீரல், கணையம் என ஜீரண மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்புகளும் தூண்டப்படும் . உணவின் சத்தானது உடல் முழுக்க பரவும்.

விருந்து சாப்பிட்ட பின் வெற்றிலைத் தாம்பூலம் போடும் பழக்கம் நம் முன்னோர்கள் ஏற்ப்படுத்தியது. தாம்பூலப் பொருட்களை மெல்லும் போது அதிகமாக சுரக்கும் உமிழ்நீர் செரிமானத்திற்கு மிக முக்கியம் என்பதாலேயே நம் முன்னோர்கள் இப்பழக்கத்தை வலியுறுத்தினார்கள்.

வாயை மூடி சாப்பிடும் போது ஜீரண மண்டலம் மிக சிறப்பாக செயல்படும். உணவானது வாயிலேயே நன்கு கரைந்து நீர்த்து விடுவதால் வயிற்றுக்கு கடுமையான வேலை இருக்காது. தவறான முறையில் உணவை சாப்பிடும் போது அதிக அளவு உணவை விழுங்க நேரிடும். வாயை அடிக்கடி திறந்து திறந்து உண்ணும் போது உமிழ்நீர் சுரப்பு இன்றியே உணவானது விழுங்கப்படும். எனவே அத்தனை உணவுகளும் முழுதாக வயிற்றின் இரைப்பையில் தங்கும். அதிக அளவு உணவினை வயிற்றினால் செரிமானம் செய்ய முயல்வது மிக மிக கடினமான வேலையாகிவிடும். நாளடைவில் இரைப்பை நீண்டு விடும். எனவே எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்டது போதாது போல இருக்கும். அதிக அளவு சாப்பிட தோன்றும். இதனால் செரிமானம் ஆக மிகுந்த நேரம் ஆகும். அளவுக்கதிகமான உணவுகளும், உமிழ்நீரின்றி முழுதாக கிடக்கும் உணவு பகுதிகளும் உடலில் தங்கி கொழுப்புகளாகவும், இறுக்கமாகவும் மாறும். உடல் பருமன், மலச்சிக்கல்கள், சர்க்கரை நோய் என வரிசைக்கட்டிக் கொண்டு உடல் பிரச்சனைகள் ஏற்ப்படும். எனவே எங்கேயும் எத்தனை அவசரமானாலும் வேக வேகமாக உண்ணுவதை நிறுத்த வேண்டும், உணவை விழுங்க கூடாது. வாயை மூடி சாப்பிடும் போது உமிழ்நீரே போது எனவே சாப்பிட்டும் போது தண்ணீர் குடிக்கவே கூடாது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதே சரியான முறை. உணவின் நேரடி போக்கு வயிற்றுக்கு மட்டுமே அமையும். சம்மணமிடும் போது இரத்த ஓட்டம் வயிற்றில் அதிகமாக இருக்கும். டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டால் கால்களுக்கே இரத்தம் அதிகமாக போகும் எனவே செரிமானம் தடைபடும். சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும். வயிற்று பிரச்சனைகள் ஏற்ப்படாது.

வாயை மூடி சாப்பிட்டால் வயிற்றுக்கு நன்மை தருவதுடன் உடல் உறுப்புகள் உமிழ்நீரால் தூண்டப்பட்டு சிறப்பாக செயலாற்றும். கிரைண்டரில் வெறும் அரிசையை மட்டும் போடுவதில்லை. தண்ணீரையும் ஊற்றுகிறோம். அதே போல இயற்கை வழங்கிய நீர் தான் இந்த உமிழ்நீர் சுரப்பு. கிரைண்டரில் அளவுக்கதிகமான அரிசியை போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து பாருங்கள். கிரைண்டரின் வேதனை புரியும். அரைக்க முடியாமல் அது திணறும். அதே போல உமிழ்நீரில் கரைக்காமல் விழுங்கப்படும் உணவானது வயிற்றை திணற செய்யும். அது மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும் . இதையெல்லாம் மனதில் கொண்டுதான் நம் முன்னோர்கள் பேசாமல் சாப்பிடு கண்ணு, டிவி பாத்துகிட்டே சாப்பிடாத ராசா, சாப்பிடுறப்ப தண்ணி குடிக்க கூடாதும்மா என சொல்லி சொல்லி நமக்கு உணவிட்டார்கள். எனவே இனியாவது சாப்பிடும் முறையை உணர்ந்து வாயை மூடி சாப்பிடவும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe