பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண சுதேச திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 3 மாதகால மர்த்தனர் பதவிக்கான பயிற்சி நெறியை பூர்த்தி செய்து அதில் சித்தியடைந்த 21 மர்த்தனர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடந்த பல வருடங்களாக மர்த்தனர் பதவிக்கான வெற்றிடங்கள் நிலவி வந்தது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் குறித்த மாவட்டங்களில் கடமையாற்றிய ஊழியர்களிடமிருந்து மர்த்தனர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான நேர்முகத் தேர்வின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் 07 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர் என்ற அடிப்படையில் இந்த மர்த்தனர் பதவிக்கான பயிற்சி நெறிக்கு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவர்களுக்கான மர்த்தனர் பயிற்சி நெறியை திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவில் ஒரு மாத காலமும், மஹரகம நாவின்ன சுதேச மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனத்தில் இரு மாத காலமும் நடாத்தப்பட்டு அதில் சித்தியடைந்தவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், இந்நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 27 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், சுதேச மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர்களான வைத்தியர் றிஷாட் புகாரி, வைத்தியர் எஸ்.ஸ்ரீபிரியா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் ஆயுர்வேத பிராந்திய இணைப்பாளர் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.நபீல் மற்றும் சுதேச திணைக்களத்தின் உயரதிகாரிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.