வயிற்றின் மேல்பகுதியில் முதுகுப்புறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது தான். பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும். இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாக இருக்கும்.
எனவே இந்த வயதுடைய ஆண்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு கடுமையான எரிச்சல் மற்றும் வலி இருக்கும். சில சமயங்களில் ரத்தம் கலந்து வரலாம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். பொதுவாக சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மில்லி கிராம் இருக்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும். எனவே, சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.
பொதுவாக 90 சதவீத கற்கள் சிறுநீர் வழியாக தானாகவே வெளியேறிவிடும். 6 மில்லி மீட்டர் தடிமனுக்கு அதிகமான பெரிய கற்கள் தான் வெளியேறாது. அத்தகைய கற்களை அதிர்வலை மூலமாக சிறு சிறு துகள்களாக உடைத்து வெளியேற்றிவிடலாம். இதில் வெளியேறாவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும்.