Ads Area

மைத்திரிபால சிறிசேன 800 கோடி ரூபா செலவில் மாளிகை கட்டியுள்ளார் - அனுரகுமார திசாநாயக.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 800 கோடி ரூபா செலவழித்து வீடொன்றை நிர்மாணித்துள்ளார் என தெரிய வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் இன்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மக்கள் கூட்டத்தில் பேசியபோதே இத் தகவலை வெளியிட்டுள்ளார்.


ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் அனாவசிய சலுகைகளை முழுமையாக நிறுத்துவோம்.

நாட்டில் சகல பகுதிகளிலும் ஜனாதிபதிக்கான மாளிகைகள் உள்ளன. ஆனால் அதில் எவரும் குடியிருப்பதும் இல்லை, ஒரு இரவைக்கூட அங்கிருந்து அனுபவிப்பர்களா என தெரியவில்லை. ஆனால் இந்த மாளிகைகளை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெறமுன்னரே 800 கோடி ரூபாய் செலவழித்து வீடொன்றை நிர்மாணித்துள்ளார் என அறிந்துகொள்ள முடிந்தது. எனவே நாம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகள் பிரதமர்களுக்கு ஒதுக்கும் அனாவசிய செலவுகள் அனைத்தையும் நிறுத்துவோம்.

ஆட்சியை கைப்பற்றி இரண்டு மாதத்தில் முழுமையாக அரச சொத்துக்களை தன்வசப்படுத்திய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம். வழங்காவிட்டால் நாமே அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி மக்கள் மயப்படுத்துவோம்.


அரச சொத்துக்களை கொள்ளையடிக்க எவருக்கும் உரிமையில்லை. அரச சொத்துக்கள் என்பது மக்களின் சொத்துகள் அதனை மக்களே அனுபவிக்க வேண்டும் என்பதே எமது கொள்கையாகும்.

நாட்டில் அனாவசியமாக செலவழிக்கும் பணத்தை சரியாக கையாண்டு கல்விக்கும், சுகாதாரதுறைக்குமான உயரிய சேவையை செய்ய முடியும். ஆனால் இன்று இந்த பணம் முழுமையாக ஆட்சியாளர் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe