முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையினை கொழும்பு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 இலட்சம் ரூபா நிதியில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பஷில் ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் வைத்திய சிகிச்சைக்காக பஷில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்பதை நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதன் பின்னரே நீதிவான் கிஹான் குலதுங்க மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.
அதன்படி பஷில் ராஜபக்ஷவுக்கான பயணத்தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 2020 மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை நீக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மார்ச் மாதம் 30 ஆம் திகதி வரை நீதிவான் ஒத்தி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ஷ முன்வைத்த மனு (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வெளிநாடு செல்ல தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் இதனை ஆராய்ந்த நீதிபதி நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

