விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த போது இராணுவத்தினரை தான் கொலை செய்தது அனைவரும் அறிந்த விடயம் என்பதால், தற்போது தன்னை கைது செய்ய முடியாது என முன்னாள் பிரதி அமைச்சரும்,அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை விட தான் பயங்கரமானவன் எனவும், ஒரே தினத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கருணா கூறியிருந்தமை தொடர்பாக அவரிடம் வினவிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
தான் கூறிய நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அதில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் கூறினாலும் அந்த கட்சிகளிடமும் கடந்த கால தவறுகள் இருப்பதாகவும் கருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தான் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.