வீடொன்றில் கொள்ளையிட்ட தொலைபேசியினை வாங்கி பயன்படுத்தி வந்த குடும்பப்பெண்கள் இருவருக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு பகுதியில் 2020.02.20 திகதி அன்று வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் நகை கைத்தொலைபேசி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையடிக்கப்பட்டதாக முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
மேலும் களவாடப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை உரிய முறையில் பெற்று முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த கைத்தொலைபேசியை பயன்படுத்தி வந்த அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் கைதானார். கைதான பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பிரகாரம் அவர் பயன்படுத்தி வந்த கைத்தொலைபேசி மீட்கப்பட்டது.
இது தவிர குறித்த தொலைபேசியை பயன்படுத்திய குடும்ப பெண் மற்றும் குறித்த தொலைபேசியை தற்போது சிறையிலுள்ள தனது கணவனிடம் இருந்து கொள்வனவு செய்ய உதவிய மற்றுமொரு குடும்ப பெண் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை(26) மாலை கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த இரு குடும்பப்பெண்கள் இருவருக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கி சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.
(Thanks - Virakesary)