வாகனங்களில் பயணிப்பவர்கள், வாகனங்களின் எஞ்சினை நிறுத்தாமல் மளிகைக் கடைகள் போன்ற இடங்களுக்கு விரைவாக சென்று வரும் பழக்கம் சாரதிகள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இது சாரதிகளுக்கு சாதாரண விடயமாக தோன்றினாலும், குறிப்பாக வணிகப் பகுதிகளில் இது போன்ற செயற்பாடுகள், விபத்துக்கள், மற்றும் ஏனைய வாகன ஓட்டுநர்களுக்கு சிரமத்தை கொடுக்கும் விடயம் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே வாகனத்தின் எஞ்சின் இயக்கத்தை நிறுத்தாமல் மளிகைக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்பதாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடு, வாகன நெறிசலை ஏற்படுத்துவதோடு வாகனத்திலுள்ள மடிக்கணினிகள், தொலைபேசிகள், பணம், மற்றும் பெறுமதியான பொருட்கள் திருடப்படவும் வாய்ப்பாக அமையும். எனவே இது போன்ற நடவடிக்கைகளை செய்து தங்களது பொருட்களையும், பணங்களையும் இழக்க வேண்டாம் என்பதாக உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை உங்களது வாகனங்களில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும், குற்றங்களை தடுக்க விளிப்புணர்வு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.