கொரோனா வைரஸ் தொற்று அபாய சூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருக்கும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை, விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக திறந்து விடுவதற்கு கல்முனை மாநகர சபை செவ்வாய்க்கிழமை (11) தீர்மானித்துள்ளது.
கல்முனைப் பிரதேசத்திலுள்ள பல விளையாட்டுக் கழகங்கள், தமது விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக இம்மைதானத்தை மீளவும் திறப்பதற்கு ஆவன செய்யுமாறு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.
இவ்வேண்டுகோளை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் ஆகியோரின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்ததையடுத்து, இக்கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கப்பட்டு, சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் இம்மைதானத்தை பயன்படுத்துவதற்காக திறந்து விடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கொரோனா தொற்று அபாயத்தை கவனத்தில் கொண்டு அனைத்து விளையாட்டு வீரர்களும் இம்மைதானத்தில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பேணி தமது பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என கல்முனை மாநகர சபையினால் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Aslam S.Moulana
Mayor's Media