சவுதி அரேபியாவில் உணவு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் உற்பத்திப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்படும் என்று சவூதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் உணவு உற்பத்தி செய்யும் ஏதேனும் ஒரு நிறுவனம் கலப்படங்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந் நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் சவுதி ரியால் முதல் 1 மில்லியன் சவுதி ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் மீண்டும் இதே தவறை செய்தால் சவுதி அரேபிய உணவுச் சட்டத்தின் 16 வது பிரிவின்படி 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் மற்றும் 10 மில்லியன் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நச்சு பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 200,000 முதல் 1 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளதோடு சட்டத்திற்கு முரணாக அனுதிக்கப்படாத அழகுசாதனைப் பொருட்களை விளம்பரப்படுத்தும் நிறுவனத்திற்கு எதிராக 5 மில்லியன் ரியால்கள் வரையும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையகம் இவ்வாறான நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளதோடு விதிகளை மீறி செயற்படும் நிறுவனங்களில் உரிமத்தினையும் ரத்துச் செய்வதாக எச்சரித்துள்ளது.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.