பி.சி.ஆர் வதந்தி காரணமாக நேற்று (19) நண்பகல் 12 மணியளவில் மூடப்பட்ட சம்மாந்துறைப் பாடசாலைகள், இன்று (20) சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தலையடுத்து மீண்டும் சுமுகமாக இயங்க ஆரம்பித்தன.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையிள்ள பாடசாலைகளில் மாணவர்க்கு கொரோனா பிசிஆர் சோதனை இடம்பெறுவதாக நேற்று வதந்தி பரவியதையடுத்து, அங்கு பதட்டம் நிலவியதோடு, பாடசாலைகளும் நேரகாலத்தோடு இழுத்து மூடப்பட்டன.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு பிசிஆர் எடுப்பதாகவும் சில மாணவர்களை பொலிஸாரும் சுகாதாரத் தரப்பினரும் பாடசாலைகளுக்குச் சென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வதந்தியை அடுத்தே, மேற்படி நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து, சம்மாந்துறைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஜ.எம்.கபீர், நேற்றுப் பிற்பகல் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவித்தலை, நம்பிக்கையாளர் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் யு.எல்.மஹ்றூப் மதனியின் ஒத்துழைப்புடன், பொதுமக்களுக்கு விடுத்திருந்தார்.
அதாவது எமது பிரிவிற்குள் வேண்டுமென்றே விசமிகளால் பிசிஆர் வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளது. இது திட்டமிட்டசதி. இது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும்.
சம்மாந்துறை சுகாதாரப் பிரிவிற்குள் எமது அனுமதியின்றி யாரும் பிசிஆர் அல்லது அன்ரிஜன் சோதனையை மேற்கொள்ளமுடியாது. எனவே, எதுவித அச்சமுமின்றி, பெற்றார்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றேன் என அவர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவித்தல் பொது இடங்களில் ஒட்டப்பட்டதுடன், பள்ளிவாசல்களிலும் ஒலிபரப்பப்பட்டன. இதனையடுத்தே, இன்று (20) அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டன. பெரும்பாலான மாணவர்கள் சமுமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Madawala News.