(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட 75 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகளில் 72 ஆயிரத்து 176 ஊசிகள் நேற்று (25) வெள்ளி வரை ஏற்றப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
மட்டு.மாவட்டத்தில் 23306 பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 24105 பேருக்கும் திருமலை மாவட்டத்தில் 24155 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.
கல்முனைப் பிராந்தியத்திற்கு இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கான முன்னாயத்த வேலைகள் சகல சுகாதாரப் பிரிவுகளிலும் எடுக்கப்பட்டுவருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் நேற்று (25) வரை கொரோனாவுக்கு 255 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 229 பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்களாவர். திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 125 பேர் மரணித்துள்ளனர்.
கிழக்கில் இதுவரை மரணித்த 255 பேரில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 125 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் 26 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 35 பேரும் மரணித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை அண்மித்துள்ளது. இதுவரை 13935 பேருக்கு கொரொனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5398 பேரும் திருகோணமலை 4290 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் 1860 பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 2387 பேரும் தொற்றுகுள்ளாகியுள்ளனர்.

