(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் ஏலவே முடக்கப்பட்டிருந்த சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் இரண்டாவது தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் அறிவிக்கப்பட்டு இரு நாட்களில் அதாவது 23 முதல் முடக்கம் நீக்கப்பட்டிருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் இரண்டாவது தடவையாக தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் இராணுவத்தளபதியால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் முடக்கம் அறிவிக்கப்பட்டு இரு தினங்களுள் அதாவது 23 ஆம் திகதி புதன்கிழமை மாலை முடக்கம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இராணுவம் பொலீஸ் விலக்கிக்கொள்ளப்பட்டது.
அங்கு ஏலவே இந்த மாதம் 4ஆம் திகதி முதலாவது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திங்களன்று மீண்டும் அக்கிராமம் முடக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.
நேற்று முடக்க நீக்கம் அறிவிக்கப்பட்டதும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
அங்குள்ள உறவுகள் சமுகஅமைப்பின் பிரதிநிதி வெ.ஜெயச்சந்திரன் கூறுகையில் எமது கிராமம் முடக்கப்பட்டமை எமது நன்மைக்காகவே. எமது மக்களுக்கு கஸ்டம் என்றாலும் அதனை நாம் பெருமனதோடு பொறுத்துக்கொண்டோம். இக்காலபப்குதியில் எமது உறவுகள் இனமதபேதம் பாராது எமக்கு உலருணவு நிவாரணம் தொடக்கம் பல உதவிகளை செய்திருந்தார்கள்.அனைவருக்கும் நன்றிகள் என்றார்.
முதலாவது முடக்கத்தின்போது 14 தினங்களுள் அரசாங்கத்தின் 5000 ருபா பெறுமதியான இரண்டு உலருணவு நிவாரணத்தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் ஒரேயொரு பொதியே இதுவரை பிரதேசசெயலகத்தால் தமக்கு வழங்கப்பட்டதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதிய வளத்தாப்பிட்டிக்கான சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது செய்தியில்:
புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் ஏற்பட்ட கொரோணா தொற்று நோய் அனர்த்தம் காரணமாக கடந்த மூன்று வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்க நிலையிலிருந்து (ஜூன் 23ம் திகதி) இறைவன் உதவியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நோயின் கோரப்பிடியில் சிக்குண்டு பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சஞ்சலத்துடனும் மன அழுத்தங்களோடும் வாழ்ந்த புதிய வளத்தாப்பிட்டி மக்களுடையதும் அதனை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்காகவும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு செயற்பட்டு பணியாற்றிய மேற்படி குழுவினர்கள் மற்றும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
எனக்கும் எமது கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுக்கும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வழிநடாத்திய அம்பாறை அரசாங்க அதிபர் அவர்களுக்கும் அதே போன்று சம்மாந்துறை ஊழஎனை - 19 வழிநடாத்தல் குழுவினருக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனவே கொரோணா கற்றுத்தந்த நல்ல பாடங்களையும் பண்புகளையும் எமது எதிர்கால வாழ்வியல் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவோம் என்று கேட்டுக்கொண்டு இந்த வேளையில் எங்களோடு ஒத்துழைத்து நடந்த புதிய வளத்தாப்பிட்டி மக்களாகிய உங்களுக்கும் ஏனைய அனைவருக்கும் என்னுடையதும் எமது காரியாலய குழுமத்தினரதும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு உங்களுக்குரிய அத்தனை கொடுப்பனவுகள் மற்றும் முயற்சிகளும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொண்டு விடைபெறும் வேளையில்
நீங்கள் இம்மாவட்டத்தின் பல பகுதியைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்புபட்டு பணியாற்றுகின்றவர்கள் என்றவகையில் இந்த நோய் உங்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ தொற்றிவிடக்கூடாது என்பதில் அக்கறையுடன் நடக்குமாறு கேட்டு விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

