சவூதி அரேபியாவின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், ஹுரூப் சட்டத்தில் மாற்றம் செய்துள்ளது.
ஹுரூப் என்பது வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் பணிக்கு வரவில்லை அல்லது அவரை விட்டுத் தப்பிச் சென்றதாகக் காட்டி ஸ்பான்சர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவருக்கு எதிராக அமைச்சகம் எடுக்கும் சட்ட நடவடிக்கையாகும்.
புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் படி, முதலாளி அளித்த புகாரை ஹூரூப் என மாற்றுவதற்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் தொழிலாளி வழக்கு தொடரவோ, வேறு முதலாளிக்கு மாறவோ வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு வாய்ப்புகளில் எதுவும் நடைபெறாவிட்டால், 60 நாட்கள் முடிந்த பிறகு அவரது இக்காமா நிலை ஹூரூப் என மாற்றப்படும்.. அதன் மூலம் அந்தத் தொழிலாளி அனைத்து அரசுப் பதிவேடுகளிலும் தப்பியோடியவர் என வகைப்படுத்தப்பட்டு சட்டவிரோத தங்குதலுக்கு உண்டான பல்வேறு தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சட்டம் இன்று (அக்டோபர் 23) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த மாற்றம் புதிய ஹூரூப் வழக்கு பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும். ஆனால், நீண்டகாலமாக ஹூரூப்பில் இருப்பவர்கள் இன்று முதல் 15 நாட்களுக்குள் வேறொரு முதலாளிக்கு மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய முதலாளிக்கு மாறும் போது, ஏற்கனவே நிலுவையில் உள்ள லெவி, இக்காமா கட்டணம், ஸ்பான்சர்ஷிப் மாற்றம் உள்ளிட்ட கட்டணங்கள் புதிய முதலாளியால் செலுத்தப்பட வேண்டும்.
வீட்டு டிரைவர்கள் மற்றும் வீட்டு பணியாளர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது..