Ads Area

அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையே வரி அதிகரிப்பு - கபிர் ஹசீம்.


 (எம்.மனோசித்ரா)

வருமான வரியை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையாகவே அமையும்.

உள்நாட்டு தொழிற்துறையினர் மீது பாரிய வரி சுமையை சுமத்தி , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையை வழங்குவது நியாயமற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இது அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையாகவே அமையும். காரணம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி அறவீட்டு முறைமையால் சிறு தொழிற்துறைகள் பாரியளவில் பாதிக்கப்படும்.

சிறு தொழிற்துறையினர் மற்றும் ஏற்றுமதித் துறையினர் செலுத்தும் வரியானது 14 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய நிறுவனமொன்றுக்கு முழுமையாக வரி விலக்களிக்கப்பட்டது. உள்நாட்டு தொழிற்துறையினருக்கு வரி மேல் வரி சுமையை சுமத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம் , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இது வரையில் வருட வருமானமாக 30 இலட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி அறவிடப்பட்டது. ஆனால் தற்போது 15 இலட்சம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையான 6 மாதங்களுக்கு இந்த வரியை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் சிறு தொழில்கள் பாரியளவில் பாதிக்கப்படும். மக்கள் மீது மீண்டும் மீண்டும் இவ்வாறு வரி சுமையை சுமத்துவது நியாயமற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே தற்போது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் கொள்ளைகளை நாமும் அவ்வாறே பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பொருளாதார மேம்பாட்டுக்கு எம்மால் முன்னெடுக்கப்படக் கூடிய வேலைத்திட்டங்களை நாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பித்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

1998 களில் மலேசியாவில் இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட போது , மஹதீர் மொஹம்மட் இதனையே செய்தார். அதனால் அவர்களால் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள முடிந்தது.

அரசாங்கம் தற்போது எடுத்துள்ள தீர்மானத்திற்கமைய தொடர்ந்தும் பயணிக்க முடியாது. இது நியாயமற்ற ஒரு விடயமாகும் என்றார்.

thanks for website-virakesari.lk

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe