நூருல் ஹுதா உமர்
வரையறுக்கப்பட்ட கல்முனை-அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச வீரமுனை தையல் நிலைய அங்குரார்ப்பண வைபவமும் ஐங்கரன் கிராமிய மகளிர் சிக்கன கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களுக்கான தையல் இயந்திரம் கையளிப்பும் நேற்று (30) மகளிர் சிக்கன கூட்டுறவுச்சங்கத் தலைவி எஸ்.யு.சிசிலியா தலைமையில் இடம்பெற்றது.
ஐங்கரன் கிராமிய மகளிர் சிக்கன கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த அதிதிகள், நாட்டின் பொருளாதார நிலையை கவனத்திற்கொண்டு எவ்வாறு சுயதொழிலை மேம்படுத்தலாம் என்பது பற்றியும், இவ்வுதவிகளை முன்வந்து செய்தவர்களின் எதிர்பார்ப்பு தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
நாடு கடந்த வாழும் தமிழர்கள் இலங்கை தமிழர்களை வாழ்வியல் ரீதியாக முன்னேற்ற எடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
கூட்டுறவின் தேவைப்பாடுகள், சமூக முன்னேற்றங்கள் பற்றி ஐங்கரன் கிராமிய மகளிர் சிக்கன கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களுக்கு இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், சமாச கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர்.இராமகிருஷ்ணன், சங்க கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ராஜசேகர், வரையறுக்கப்பட்ட கல்முனை-அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் எஸ்.லோகநாதன், கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதம இலிகிதர் எஸ்.வனிதா, ஐங்கரன் கிராமிய மகளிர் சிக்கன கூட்டுறவுச்சங்கச் செயலாளர் விமலா கிருபராஜா உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.