Ads Area

போதை ஒழிப்புக்கான கலந்துரையாடல்.| Discussion on drug addiction.

 நூருல் ஹுதா உமர்



நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஆதரவுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு (04) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது நிந்தவூரில் போதை ஒழிப்பு சமூக ஆதரவு போரம் ஒன்றினை அமைப்பதனூடாக ஊரின் சமூக நலச் செயற்பாடுகளை ஒன்றுக்கு ஒன்று முரண்பாடுகளின்றி நேர்த்தியாக செயற்படுத்த முடியுமெனவும் அதற்கான அடித்தளமாகவே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரயீஸ் தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர், போதைப் பாவனையுடன் தொடர்புள்ளவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான வழிப்படுத்தல்களையும் விழிப்புணர்வுளையும் ஜும்மா பெரிய பள்ளிவாயல் மற்றும் உலமா சபை இணைந்து செயற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஊரிலுள்ள சகல அமைப்புக்களையும் உள்ளடக்கிய அனர்த்த முகாமைத்துவ அணி மற்றும் ஜும்மா பெரிய பள்ளி வாயலின் கோரிக்கைகளுக்கு அமைவாக போதையுடன் தொடர்புடையவர்களுக்கான  மையவாடியில் புறம்பானதொரு பகுதியை ஒதுக்கீடு செய்வதற்கான அனுமதி பிரதேச சபையினால் வழங்கப்பட்டு அங்குரார்ப்பன நிகழ்வினை நடத்துவதற்கு எதிராக நீதிமன்ற கட்டளை பெறப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தடையுத்தரவிற்கு பின்னர் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைக்கமைய நிந்தவூர் பிரதேச சபை இடுகாடு சுடுகாடு சட்டத்தினை பிரயோகித்து இது விடயம் குறித்து காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரயீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.எம். பைசால் காசிம்,  நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், உலமா சபை பிரதிநிதி, கோயில் தர்மகர்த்தா, நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிநிதி, கல்முனை பிராந்திய உணவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீம், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் பிரதிநிதிகள், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி, பாடசாலை அதிபர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளென லரும் கலந்து கொண்டிருந்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe