கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையினால் எதிர்வரும் 16ஆம் திகதி டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு, விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அன்றைய தினம் ஒவ்வொரும் தமது வீடுகளிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடி.ய இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றுமாறு குறிப்பிட்டார்.
அதேவேளை டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் பொருட்டு, வெற்று காணிகளை வைத்திருப்போர் தமது காணிகளை துப்புரவு செய்ய வேண்டும்.
டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்களின் போது சமூக மட்ட அமைப்புக்கள், பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றாலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தம் செய்வதும், அந்தந்த குடியிருப்புகளுக்கு அருகாமையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்காணிப்பதும் பொது மக்களின் பொறுப்பாகும்.
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய குப்பைகள், டயர்கள், யோக்கட் கப், சுரட்டைகள், மட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலங்கள் சேகரிப்பது, நீர்தேங்கியுள்ள இடங்கள் துப்புரவு செய்வது, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
சம்மாந்துறை பிரதேசத்தினை டெங்கு அற்ற பிரதேசமாக பேணிப் பாதுகாக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு தினம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வீரமுனை-01, 02,03,04 சம்மாந்துறை - 04,05,06,07,06, 09, 10, 11,12 கருவாட்டுக்கள்-01 ,02 ,03 ஆகிய கிராமசேவர் பிரிவுகள் சம்மாந்துறை மத்திய வலயமும் தமிழ் பிரிவு-01 ,02 ,03 ,04 மட்டக்களப்பு தரவை -01 ,02 சம்மாந்துறை -01 ,02 ,03 புளக் ஜே கிழக்கு-01 ,02 ,03 கல்லரச்சல்-01 ,02 ,03 விளினியடி-01, 02, 03 ஆகிய கிராமசேவர் பிரிவுகள் சம்மாந்துறை கிழக்கு வலயமும் சென்னல் கிராமம் - 01, 02 உடங்கா -01 ,02 மலையடிக்கிராமம் -01 , 02 ,03 ,04 புளக் ஜே மேற்கு-01 ,02 ஆகிய கிராமசேவர் பிரிவுகள் சம்மாந்துறை மேற்கு வலயமாக பிரிக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னடுக்கப்படவுள்ளது.