தகவல் - சம்மாந்துறை அன்சார்.
தவறான லொக்கேசன் காரணமாக உணவை தாமதமாக டெலிவரி செய்ததனால் இலங்கையர் ஒருவரை குவைத் குடிமகன் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லஷ்கன் திலகரத்ன என்ற 44 வயதான உணவு டெலிவரி தொழிலாளி ஒருவரே கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வாடிக்கையாளரால் சுடப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குவைத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரியும் திலகரத்ன, உணவை டெலிவரி செய்ய வேண்டிய வாடிக்கையாளரின் லொக்கேசனில் ஏற்பட்ட தவறு காரணமாக குறித்த வாடிக்கையாளரின் உணவு ஓடரை தாமதமாக வழங்கியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த வாடிக்கையாளரான குவைத் குடுமகன் தனது வீட்டு வாசலில் வைத்து இலங்கையரை தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார் இதனால் லஷ்கன் திலகரத்னவின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வயிற்றுப் பகுதியில் பலத்த காயத்திற்குள்ளான லஷ்கன் திலகரத்ன அங்கிருந்து தப்பித்து இந்தியர் ஒருவரின் உதவியை நாடிய நிலையில் குறித்த இந்தியர் லஷ்கன் திலகரத்னவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
10 மற்றும் 13 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான லஷ்கன் திலகரத்ன, கடந்த ஜனவரி 10 ஆம் தேதி குவைத் குடிமகனால் தான் சுடப்பட்டமைக்காக நீதி வேண்டி இலங்கை அதிகாரிகளை தற்போது கோரியுள்ளார். குறித்த செய்தியினை இலங்கை ஊடகங்களும் தற்போது வெளிச்சம் போட்டுக் காட்டி, பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு நீதி கோரி வருகின்றனர்.