Ads Area

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் - கடும் மழையிலும் மூன்றாவது நாளாகத்தொடரும் போராட்டம்.

 பாறுக் ஷிஹான்.


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கெதிராக அங்குள்ள பொதுமக்கள் 3வது நாளாக இன்று (27) கடும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.


அதன் தொடர்ச்சியாக 3வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இன்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஸ்னபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச் செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993ம் ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.


இருந்த போதிலும் ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை  ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.


கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாதெனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப்போராட்டம் தொடருமென மேலும் மக்கள் தெரிவித்தனர்.


அத்துடன், குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு  கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென்பதற்காக உண்ணாவிரதத்போராட்டம்  பல அரசியல்வாதிகள், பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தைக்கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.


மேற்குறித்த உண்ணாவிரதப்போராட்டமானது அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித்தர வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதப்போராட்டம்  இடம்பெற்றிருந்தது.


இதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர, கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குருஇகல்முனை, மாநகர சபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன், அழகக்கோன் விஜயரத்னம், ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன்  ஆகியோரும் கலந்து கொண்டு களமிருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe