பாறுக் ஷிஹான்.
ஒடுக்கமான பாலம் புனரமைப்புச் செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பொதுமக்கள் பாவிப்பதுடன், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள இப்பாலத்தினூடாக ஆயுர்வேத வைத்தியசாலை, உப தபாலகம், பாடசாலை, பள்ளிவாசல்கள் மற்றும் தொழில் நிமித்தமான செல்வோர் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.
அத்துடன், இரவு வேளையில் எவ்வித மின்னொளியுமின்றி இருளில் முழ்கிக் காணப்படுவதனால், மாற்றுப்பாதைகளை பாதசாரிகள் பயன்படுத்துவதைக்காண முடிகின்றது.
இது தவிர, உடைந்து விழும் நிலையில் இவ்வொடுக்கமான பாலம் காணப்படுவதாகவும், உடனடியாக மீள உடைத்து புனர்நிர்மாணம் செய்ய வேண்டுமென சாய்ந்தமருது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பாலம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தீர்வைத்தருவதாக கடந்த கால தேர்தல் மேடைகளில் வாக்குறுதி வழங்கினாலும் அவையேதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக்கூறி வருகின்ற நிலையில், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க முன்வர வேண்டுமென சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.