Ads Area

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு ஒத்தி வைப்பு.

 பாறுக் ஷிஹான்.


கல்முனை மேல் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையுத்தரவின் மூலம் நிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண  பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலான  வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அதுவரை நியமனம் தொடர்பிலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


நேற்று (5) கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கெதிராக இடைக்காலத்தடை வழங்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட வழக்கு மீண்டும்  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


மனுதாரர்களின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் மன்றில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், நியமனம் தொடர்பிலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு தரப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.


இதனடிப்படையில் இடைநிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் சம்பந்தமாக சில ஆலோசனைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கீழ்வரும் விடயங்கள் எதிர்வரும் தவணைக்கு முன்னர் முன்னெடுக்க குறித்த வழக்கில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டன.


26.05.2024ம் திகதி  நியமனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பரீட்சாத்திகளின் பட்டியலும் பின்னர் இணையத்தில் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு பரீட்சாத்தியும் தனது பெறுபேறுகளைப்பெற முடியுமான பொறிமுறையும் வெளியிடப்படிருந்தது.


தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் ஒருவர் பெற்ற புள்ளிகளுக்கும் இணையத்தில் அவரின் அடையாள அட்டை இலகத்தை உள்ளீடு செய்யும் போது வரும் புள்ளிகளுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன. 


இது சம்பந்தமாக பிரதிவாதிகள் விளக்கமளிக்கையில் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியல் கணனிப்பிசகு காரணமாக பிழையாக புள்ளிகள் உள்ளீட்டம் செய்யப்பட்டதாகவும், பரீட்சாத்திகளின் அடையாள அட்டைகளை உள்ளீடு செய்து இணையத்தில் பெறப்படும் புள்ளிகளே சரியான புள்ளிகள் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதோடு, இத்தவறு சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இவ்வழக்கு ஜூன் மாதம் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்ற போதிலும் அதற்கிடையில்  பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதிவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். 


மீண்டும் இணையப்பொறிமுறை செயற்படும். அதில்  அடையாள அட்டையை இட்டு புள்ளிகளை இன்னொரு முறை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும். அதனை இதற்கு முன்னர் இணையத்தில் நீங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெற்ற புள்ளிகளோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியும். அதில் வித்தியாசம் வருமாக இருந்தால் உடனே கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


புள்ளிகள் வெளியிடப்பட்டு அவற்றை ஒப்பிட்டு  பரிசோதித்து தெளிவு பெற ஒரு வாரகால அவகாசம் தரப்படும். அதற்குள் ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனே பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்வதன் மூலம் தெரிவிக்க முடியும்.


நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் சான்றிதழில் effective date சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள் நடந்து அல்லது பாடங்கள் சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள் நடந்து நேர்முகப்பரீட்சைக்கு நிராகரிக்கப்பட்டவராக இருந்தால் சரியான ஆவணங்களோடு மேன்முறையீடு செய்து மீண்டும்  நேர்முகப்பரீட்சைக்கு உள்வாங்க நடவடிக்கையெடுக்க முடியும்.


குழப்பங்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவுள்ள ஒரு வலயத்தில் ஒரு பாடத்திற்கு எத்தனை வெற்றிடங்கள் இருக்கின்றது என்பது வெளியிடப்படாமையாகும். அப்பட்டியல் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 


அதனோடு விண்ணப்பித்த பாடத்தின் வெட்டுப்புள்ளிகளோடு அனுமதி வழங்கப்படும். 


குறிப்பிட்ட பாடத்திற்கு ஒரு மாவட்டத்தில் 10 பேர் தேவை என்றிருந்தால், நீங்கள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் நீங்கள் 11வது ஆள் என்றால் நீங்கள் அப்பாட நியமனத்திற்கு தகுதியானவரல்ல.( பின்னர் வெளியிடப்படும்).


முகநூலில் எவரையும் விமர்சிப்பது, அரச உத்தியோகத்தர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துச்சொல்வது, நீதிமன்றக்கட்டளைகளை  சாடுவது தவிர்க்கப்பட வேண்டும்.


நியமனத்திற்கு தகுதியில்லை என்பது தெரிந்தால் அதனை ஏற்றுக்கொண்டு வேறு வழிகளைத்தேட மனுதாரர்கள் முன்வர வேண்டும்.


புள்ளிகளில் எதாவது குழறுபடிகள் இருப்பின் நீதிமன்றத்தை நாடும் முன்னர் அவற்றைத் தீர்த்துக்கொள்ள மேன்முறையீடுகள் மூலம் முயற்சி செய்யுங்கள். 


நீதிமன்றம் இறுதித்தீர்வாகவே இருக்க வேண்டுமென இரு தரப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திப் பின்னணி


கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஜி.சி.ஈ. உயர்தரப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆள்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி நடாத்தப்பட்டிருந்தது.


இப்பரீட்சைப்பெறுபேறுகளுக்கமைவாக குறித்த நியமனத்திற்கான நேர்முகப்பரீட்சை இடம்பெற்ற நிலையில், இதன் மூலம் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் கிழக்கு மாகாணக்கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கிறது.


அத்துடன், இவர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


எனினும், இத்தெரிவில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், இதனால் தமக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலையடைந்துள்ளனர்.


குறித்த நேர்முகப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடாமல் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் மாத்திரமே வெளியிடபட்டிருக்கிறது. 


இவ்வாறு நியமனம் வழங்கும் முறையானது சட்டத்திற்கு முரணானதென பல தரப்பினரும் சுட்டிக்காட்டி இருந்தனர். இவ்விவகாரமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த நேர்முகப்பரீட்சையில் இடம்பெற்றவை எனக்கூறப்படும் குளறுபடிகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இவற்றை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகளையும் ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று ஆளுநர் மற்றும் அதிகாரிகளை பாதிக்கப்பட்டவர்கள் கேட்டிருந்தனர்.


இதற்கிடையில் இவ்விடயத்தையொட்டி கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் அதன் செயலாளர் ஆ.மன்சூர் நேற்று 'அனைத்துப் பரீட்சார்த்திகளுக்குமான அறிவித்தல்' என்ற பெயரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


அதில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்குறித்த போட்டிப்பரீட்சையின் தரவு உள்ளீடு செய்யும் கணினி அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக அப்போட்டிப்பரீட்சை சம்பந்தமான மேல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை பரீட்சார்த்திகள் அனைவருக்கும் தயவுடன் அறியத்தருகிறேன் என்றும் இக்கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இறுதித்தேர்வுப்பட்டியல் மற்றும் மொத்தப்புள்ளிகள் பட்டியல் கிழக்கு மாகாண இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தயவுடன் அறியத்தருகிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதன்படி ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் காணப்படுவதாலும் ஆசிரியர் நியமனம் புள்ளிகளில் தவறுகள் மோசடி உள்ளமையை மாகாண நிருவாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதுவரை நியமனம் எதுவும் வழங்கக்கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்திற்கு கல்முனை மேல் நீதிமன்றத்தினால் கடந்த  ஜூன் 5 வரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை (28)  வழங்கப்படவிருந்த நியமனம் மறு அறிவித்தல் வரை இடைக்காலத் தடையுத்தரவின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.


குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான ஹஸ்ஸான் றுஷ்தி, அம்ஜாட் அகமட், ஆதம் லெப்பை ஆஸாத்,  சாதீர் முஹமட், குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் றாஸி முஹம்மத் ஆகியோரினால் பட்டதாரி ஆசிரியர்களின் நலன்கருதி பொதுநலத்துடன் இரவு, பகலாக குறித்த வழக்கு தயார் செய்யப்பட்டு மன்றில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸியின்  நியமனத்தில் நடந்தேறிய முறையீனங்கள் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு  விளங்கப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe