குவைத்தில் எதிர்வரும் ஏப்ரல்-22,2025 முதல் அமுல்படுத்தப்படும் புதிய போக்குவரத்து சட்டத்தின்படி இந்த புதிய தண்டனை விதிக்கப்படவுள்ளது. புதிய சட்டம் அமலுக்கு வருவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தினமும் ஒரு சட்டம் பற்றியும், அதை மீறினால் விதிக்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை பற்றியும் பல மொழிகளில் உள்துறை தினமும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கான இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் விதிக்கப்படும் தண்டணை மற்றும் அபராதம் பின்வருமாறு அமையும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை மற்றவர்கள் நிறுத்தினால் அடிப்படை பிழையாக150 தினார் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமீறல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் ஒரு வருடத்திற்கும் குறையாமலும் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறை தண்டனை கிடைக்கும் மற்றும் 600 தினார்களுக்கு குறையாமலும், 1000 தினார்களுக்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படும். அல்லது இந்த தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை விதிக்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கும். அதேபோல் விதிகளை மீறுபவர்கள் வெளிநாட்டினராக இருந்தால், தண்டனைக்குப் பிறகு அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.