வி.சுகிர்தகுமார்.
ஆசிரியர்களை பாதுகாக்க தவறினால் உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் குறிப்பிட்டார்.
திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தனது கண்டத்தை தெரிவிப்பதுடன் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளருக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்கள் கடந்தகாலத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறிய அவர் இவ்விடயம் தொடர்பில் சமூகமும் அக்கறையுடன் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அக்கரைப்பற்று மணிக்கூட்டுகோபுர சந்தியில் ஒன்று கூடிய ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் உள்ளிட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் அங்கிருந்து சாகாம வீதியூடாக பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்களால் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜிடம் மகஜர் ஒன்றை கையளி;க்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டுச்சம்பவங்களுக்கு தீர்;வு காணப்படவேண்டும் எனவும்; சம்மந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தும் மகஜர் கையளிக்கப்பட்டது.
மகஜரை பெற்றுக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதேநேரம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் அதிபர்களும் கண்டனத்தை தெரிவித்ததுடன் வாள்வெட்டு குழுவின் அச்சுறுத்தலுக்கு உள்ளான பொதுமகன் ஒருவரும் கருத்து தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாடசாலைகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்பவர்கள் தொடர்பில் தகவல்கள் உள்ளபோதிலும் தகுந்த நடவடிக்கையினை சம்மந்தப்பட்டவர்கள் எடுக்க தவறியுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக தனக்கு தொலைபேசி ஊடாக அச்சறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கூறினார்.