வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அவற்றுக்கு போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கடவத்தை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு, அனுராதபுரம், பாணந்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர பிரதேசத்தில் மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு நேற்றுமுன்தினம் இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இவர்கள் வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அவற்றின் இலக்கதகடுகளை மாற்றி போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 36 வயதுடைய மாளிகாவத்தை மற்றும் ஹொரனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
23 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேசிய அடையாள அட்டைகள் வருமான உறுதிப்பத்திரங்கள் அண்மையில் பதிவு செய்யப்பட்ட இரு வாகன இலக்கதகடுகள் மற்றும் 5 கைத்தொலைபேசிகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சந்தேக நபர்கள் அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்று அதனை 104 இலட்சத்துக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் கொழும்பு பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில காரொன்றை வாடகைக்கு பெற்று அதனை 90 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனிடையே பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கார் ஒன்றை வாடகைக்கு பெற்று அதன் இலக்க தகடு மற்றும் செசி இலக்கம் என்பவற்றை மாற்றி 58 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளளனர்.
மோரகஹென பிரதேசத்தில் காரொன்றை வாடகை அடிப்படையில் கொள்வனவு செய்து அதனை 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர்.
மேலும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் காரொன்றை பெற்று அதனை 42 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜரப்படுத்த்பபடவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.