Ads Area

இந்தியாவில் உத்தராகண்டில் மற்றுமொரு விமான விபத்து, 5 பேர் பலி.

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


ஆரியன் ஏவியேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில் விமானி உடன் சேர்த்து மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர். இன்று அதிகாலை 5.17 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.


இது தொடர்பாக உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தள பதிவில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். “ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்த வருத்தமான செய்தி கிடைத்துள்ளது. எஸ்டிஆர்எஃப் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்” என அதில் அவர் கூறியுள்ளார். தற்போது அங்கு மீட்பு பணி விரைந்து நடைபெற்று வருகிறது.


கடந்த வியாழக்கிழமை அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இது தேசம் முழுவதும் பெருந்துயரத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது கவுரிகுந்த் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த விபத்தோடு சேர்த்து 5-வது முறையாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe