Ads Area

அறுகம்பைக்கு விரையும் உல்லாசப் பிரயாணிகள்!!

 பாறுக் ஷிஹான்


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-  களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி


இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம்  உல்லாசப் பிரயாணிகளால்   அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.


கிழக்கு மாகாணத்தில் உள்ள   அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பே கடற்கரைப் பிரதேசதம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால்  இப்பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள்  ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.


கடந்த கால கொரோனா அனர்த்தம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொருளாதார சீர்கேடு (எரிபொருள் பற்றாக்குறை எரிவாயு பற்றாக்குறை)  அரகல கிளர்ச்சி  உள்ளிட்ட  அசாதாரண சூழ்நிலை காரணமாக  இப்பிரதேச சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.எனினும்  தற்போது நாடு  மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதார விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின்  பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இது தவிர இப்பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர்.இதனால் தங்குமிட வசதிகள் உணவகங்கள் அதிகளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளன.


மேலும் இக்கடற்கரைப் பிரதேசதம் உலகரங்கில் மிகப் பிரபல்யம் பெறுவதற்கு சர்வதேச அளவில் இக்கடற்பரப்பில் நீரலைச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் இப்பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.இங்கு சர்வதேச ரீதியிலான நீரலைச் சறுக்கு விளையாட்டு இக்கடற்பரப்பில் வருடந்தோறும் இடம்பெறுவதனால் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு போட்டியாளர்களும் அவர்களோடு இணைந்ததாக பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இப்பிராந்தியத்திற்கு வருகை தருவது இலங்கை நாட்டுக்கு அந்நியச் செலாவணியினை பெருமளவில் ஈட்டிக் கொள்வதற்கு வழிகோலியாகவும் அமைகின்றது.


உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இப்பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் தங்கியிருந்து இப்பிரதேசத்தின் அழகினை இரசிப்பதனால் இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிலையங்கள் பல்வேறானவை அமையப் பெற்றுள்ளன. இதனால் பெருந்தொகை அந்நியச் செலாவணி நாட்டுக்கு வருமானமாய் கிட்டி வருகின்றன.இந்த  மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 30 ஆயிரத்துக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் ஏப்ரல் மாதம் முதல்  ஒக்டோபர் மாதம் வரை பொத்துவில் அறுகம்பே பிரதேசம்  உல்லாசப் பிரயாணிகளின் வருகை   மற்றும் பொழுது போக்கும் பருவ கால  இடமாக கூறப்படுகின்றது.இதை விட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  பேராதனைப் பூங்கா,  நுவரெலியா , பாசிக்குடா, உல்லை , போன்ற இடங்களுக்கு பெருமளவில் சென்று பொழுதைக்கொண்டாடி உல்லாசமாக கழித்து வருகிறார்கள் .குறிப்பாக  அறுகம்பை உல்லை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் சரளமாக இணைந்து குதூகலமாக பொழுதைக்   கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு படை எடுத்து வருகின்றனர்.


இதை விட கணிசமான வருமானத்தை ஈட்டும் சாத்தியக்கூறுகளுடன்  உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக அறுகம்பே சுற்றுலா வலயத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த  ஜனாதிபதி  நடவடிக்கை எடுத்துள்ளார்.


குறித்த அருகம்பே  வளைகுடா கடற்கரையோரத்தில் பிரபலமாக விளங்கும் நீர் பனிச்சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் கணிசமான வருமானத்தை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe