பாறுக் ஷிஹான்.
தலைமை வேட்பாளரது துரோகச்செயல் எமக்கு ஆதரவளித்த மக்களையும் எமது தலைமை உட்பட சக வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துல்கர் நயீம் (துல்சான்) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் ஈ.சி.எம் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்துத்தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த 2025ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் எங்கள் கட்சி மாம்பழச்சின்னத்தில் சுயேட்சையாக சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியிருந்தது.
இச்சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளராக எமது நாபீர் பௌண்டேசனின் நீண்ட காலப்பணியாளராகவும் நிறுவன இஸ்தாபகப் பணிப்பாளர் உதுமான்கண்டு நாபீரின் உறவினருமான ஒருவரையும் ஏனைய 23 பேரையும் இணைத்து இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தோம்.
நான் இத்தேர்தல் களமுனையில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டேன். இத்தேர்தலில் எமது வேட்பாளர்கள் சிரமப்பட்டு தியாகத்துடன் ஒரு பட்டியல் (போனஸ்)ஆசனத்தைப் பெற்றுக்கொண்டோம்.
ஆனால், மேற்சொன்ன குறிப்பிட்ட தலைமை வேட்பாளர் எங்களுடன் கலந்துரையாடாமலும் சக வேட்பாளர்களின் எவ்வித ஒப்புதலுமின்றி தனக்குள்ள சுயேட்சைக்குழு தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பெயரை தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்து அண்மையில் வெளியாகிய விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பிரதேச சபை உறுப்பினர் பதவியைப் பெற்றிருக்கின்றார்.
இத்தேர்தலில் எந்தவொரு பின்புலமுமின்றி பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு ஆண், பெண் வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சைக்குழுவூடாக பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.
அதன் பிரதிபலனாக ஒரு ஆசனத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இவ்வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாங்கள் முயற்சி செய்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட தலைமை வேட்பாளர் இவ்வாறு துரோகச்செயலை மேற்கொண்டமை எமக்கு ஆதரவளித்த மக்களையும் எமது தலைமை உட்பட சக வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றது.
எமது கட்சியின் தலைவர் உதுமாண்கண்டு நாபீர் ஆரம்பத்தில் இத்தேர்தல் குறித்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டிருந்தார். அதாவது, கட்சிக்கு வாக்களித்த மக்களை திருப்திப்படுத்துவதற்காகவும் தேர்தலில் பாடுபட்ட வட்டார வேட்பாளர்களைக் கௌரவிக்கும் பொருட்டு கிடைக்கப்பெறும் ஆசனத்தை பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார்.
இவ்விடயத்தை உறுதிப்படுத்த தேர்தல் முடிவு கிடைக்கப்பெற்றவுடன், அமுல்படுத்த பல கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருந்தார். அக்கலந்தரையாடல்களில் கூட சம்பந்தப்பட்ட தலைமை வேட்பாளர் உட்பட ஏனைய வேட்பாளர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால், தலைமை வேட்பாளர் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்தமை எமது கட்சிக்கும் எமக்கும் ஏமாற்றமளித்திருக்கின்றது. அத்துடன், இத்தலைமை வேட்பாளருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நாட்டிற்கு எமது தலைவர் வருகை தந்ததுடன் மேற்கொள்ளப்படும்.
தலைமை வேட்பாளர் எனக்கூறப்படும் நபர் எமது நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றியவர். அவரிடம் நிறுவனத்தின் மிக முக்கியமான பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நம்பிக்கைக்குரியவரான அவர் இவ்வாறு செயற்பட்டமையானது மிகவும் கவலையளிக்கின்றது.
அத்துடன், எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட தலைமை வேட்பாளர் மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் எமது நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்பதையும் சகலருக்கும் அறியத்தருகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.