தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் ஆற்றோரம் மற்றும் பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியிலுள்ள ஆற்றோரங்களில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் செவ்வாய்க்கிழமை (16) சம்மாந்துறை ஊழல் ஒழிப்புப் பிரிவினரினால் முற்றுகையிடப்பட்டது.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.
இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தப்பியோடியுள்ளதுடன், அவர்களைக்கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், கசிப்பு உற்பத்திற்கு தயாராக இருந்த உபகரணங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.