பாறுக் ஷிஹான்.
மட்டக்களப்பு, குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய தரப்பினர் அனைவரையும் எதிர்வரும் 17ம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (27) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் நீதிவான் த.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த புதைகுழியைத் தோண்டுவதற்கான நிதியைப் பெறுவதில் இழுபறிநிலை காணப்படுவதாகவும் அவற்றை உடனடியாகத் தீர்ப்பதற்கான பொருத்தமான கட்டளையை ஆக்குமாறும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் திறந்த மன்றில் சமர்ப்பணங்களை மேற்கொண்டார்.
குறித்த சமர்ப்பணங்களில் திருப்தியுற்ற மன்று தொடர்ந்து வழக்கின் திறத்தவர்கள் அனைவரையும் எதிர்வரும் 17.11.2025ல் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை ஆக்கியுள்ளது.
இவ்வழக்கில் முறைப்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எச்.எம்.மனாறுதீன், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

