(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் 46 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், கிழக்கு மாகாண சபையினால் மூன்று பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தை கண்டித்து பிரதேச சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று மதியம் செவ்வாய்கிழமை பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப்படக் கூடாது என்பதற்காக இன்று அதிகாலை தொடக்கம் அனைத்து ஊழியர்களும் கறுப்பு பட்டி அணிந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திகயவாறு திண்மக்கழிவு அகற்றல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் முறையாக நடைமுறைப்படுத்திவிட்டு தமது கடமை நேரம் நிறைவடைந்த பின்னர் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண சபையால் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட புதிய நியமனத்தை கண்டித்தும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும் கோரியே தற்காலிய ஊழியர்கள் கறுப்பு பட்டியணிந்து கொண்டும் பல சுலோகங்கள், பதாதைகள் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பல வருடங்களாக பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிய ஊழியர்களுக்கு கிழக்கு மாகாண சபையினால் இழக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் பெற்றுத்தரக் கோரி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட்டிடம் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களினால் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.





