Ads Area

எனது பாடல்களைப் யாராவது பாடி பணம் சம்பாதித்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும் - இளையராஜா.

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமையை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய வி‌ஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும்.

என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்களோ, இசை வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை தாங்கள் உணர வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்.(இந்திய படைப்பு காப்புரிமைக்கான அமைப்பு) யில் உறுப்பினராக இருந்தேன். நான் இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை வசூலிக்கும் உரிமையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு வழங்கி இருக்கிறேன்.

ஐ.பி.ஆர்.எஸ். அமைப்புக்கு பதிலாக இசைக்கலைஞர்கள் சங்கம் இந்த ராயல்டி தொகையை வசூல் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடகர்களும், பாடகிகளும் இதில் அடங்குவார்கள் எல்லோரும் இந்த வி‌ஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் பாடுவதற்கு நான் தொல்லை கொடுக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை.

நீங்கள் இலவசமாகப் பாடினால், இலவசமாகப் பாடிவிடலாம். அதற்கு பணம்கொடுக்கத் தேவையில்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். பணம் வாங்குகின்றீர்கள் அல்லவா? என் பாடல் என்றபோதும் பணம் எப்படி இல்லாமல் போகும். பங்கு ஒரு சின்ன தொகை.

சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான் பங்கு கேட்கிறோம். வரும் தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும். முன் உதாரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe