(காரைதீவு நிருபர் சகா)
இந்துக்களின் புனிதநாளாம் திருக்கார்த்திகை விளக்கீடன்று ஆலயம் அருகே மீண்டும் மாட்டெலும்புகள் வீசப்பட்டுள்ளதால் இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பதட்டமும் நிலவியது.
இச்சம்பவம் (22) வியாழக்கிழமை சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுக் கிராமத்தின் தென்கோடியின் கடற்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரகாளியம்பாள் ஆலயமருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக இந்துக்கள் அனுஸ்டிக்கும் திருக்கார்த்திகை விளக்கீடும் பௌர்ணமியும் நிறைந்த புனித நந்நாளிலே இத் துர்ச்சம்பவம் இடம்பெற்றிருப்பது இந்துக்கள் மத்தியில் பலத்த வெறுப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காரைதீவு பத்திரகாளியம்பாள் ஆலயமருகே அதிகளவான மாட்டெலும்புகள்
இனந்தெரியாத விசமிகளால் வீசப்படுவது இது முதற்றடவையல்ல. இது 4வது
தடவையாகும்.
சம்பவத்தை கேள்விப்பட்டதும் மக்கள் ஒன்றுகூடினர். பதட்டம் நிலவியது.
உடனடியாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் மு.காண்டீபன் ஸ்தலத்திற்கு
விரைந்து தவிசாளருக்கு தகவலை வழங்கினார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சற்று சுகமில்லாமல் நடக்கமுடியாதநிலையிலிருந்தபோதிலும் கைத்தாங்கலில் அங்கு வந்து
சேர்ந்தார்.
மக்களை அமைதிப்படுத்திவிட்டு சம்மாந்துறைப் பொலிசாருக்கு முறைப்பாடு செய்தார். சிறிதுநேரத்தில் சம்மாந்துறைப்போக்குவரத்துப் பொலிசார் அவ்விடம் வந்தனர். வர்களிடம் தவிசாளர் ஜெயசிறில் நிலைமையை விளங்கப்படுத்தினார்.
அவர் பொலிசாரிடம் கூறுகையில்:
இது இந்துக்களின் புனித தினத்தில் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு இனவிரோத
செயற்பாடாகும். இரு இனங்களிடையே வேண்டுமென்றே பகைமையை மூட்டிவிடும் ஒரு ஈனச்செயற்பாடாகவே இதனைப்பார்க்கிறேன்.
இதனால் இந்துமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன் ஆத்திரப்பட்டுள்ளனர்.மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கு நிலவிய
பதட்டத்தில் இருஇனங்களிடையே முறுகல்நிலை தோன்றுவதற்கு வாய்ப்பிருந்தமையை கருத்திற்கொண்டுஎனக்கு இயலாமலிருந்தாலும் இங்குவந்து அமைதியை நிலைநாட்டினேன்.
இது 4வது தடவையாக இடம்பெற்றிருக்கிறது.இன்னமும் பொறுமை காக்கமுடியாது. எனவே பொலிசார் பக்கச்சார்பின்றி விசாரணை நடாத்தி குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி இந்துக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார் இந்த விடையம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசாரும் தவிசாளரிடம் தெரிவித்தனர்.