மஹிந்த தரப்பின் பகிஸ்கரிப்புக்கு மத்தியில் ஆளும் தரப்பு வரிசையில் தனியே நின்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச உரைாற்றினார் அவரின் உரையின் முக்கிய விடையங்கள் சில.
* பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியை கொடுங்கள் ..!
* அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது.
* ஜனாதிபதியுடன் பேசி, முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும்.!
"அரசியல் நெருக்கடியால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஜனநாயக கட்டமைப்புக்களின் பாதுகாப்பை பாராளுமன்றம் உறுதிப்படுத்துகிறது.
நாம் 30 வருட காலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். முப்படை வீரர்கள் மட்டுமன்றி இலங்கையர்கள் ஏராளம் உயிரிழந்தனர். அப்படி ஒரு நிலைமை மீண்டும் வரக் கூடாதென்றே ஒரு ஜனநாயக புரட்சி நடந்தது. அதனால் தான் ஐ தே க பொது வேட்பாளராக மைத்திரியை தெரிவு செய்தது. நாடு நன்றாக வர வேண்டும் என்பதே மக்களின் அவாவாக இருந்தது.
நாட்டின் நன்மை கருதி 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினோம். நிறைவேற்று அதிகாரத்தின் பல அதிகாரங்கள் நீக்கப்பட்டன. அது முழுமையானதல்ல.
நாங்கள் நல்லாட்சியை தேசிய அரசாக அமைத்தோம். பல பிரச்சினைகள் குற்றச்சாட்டுக்கள் வந்தபோதும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
ஆனால் ஒரு கட்டத்தில் இருதரப்புக்களும் சராசரி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டன. அந்த இருதரப்பையும் கட்டுப்படுத்த இரு தலைவர்களாலும் முடியாமற் போனது.
அப்படி ஒரு நிலைமையில்தான் திடீரென ஒக்டொபர் 26 இல் அரசியல் அதிரடி தீர்மானங்கள் வந்தன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அது இப்பொது நீதிமன்ற விசாரணையில் நிற்கின்றது.பின்னர் சபையில் குழப்பங்கள் ஏற்பட்டன.
மக்கள் இன்று செய்வதறியாமல் நிற்கின்றனர். இதுவரை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை..
அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவை அரசியலமைப்பு அதிகாரம் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதையும் அரசியலமைப்பு அதிகாரத்தின் ஆணையை நிறைவேற்று அதிகாரம் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கும் நிலைமை இப்போது உள்ளது.
அரசியல் பேதங்களை மறந்து நாம் பாராளுமன்ற ஜனநாயக முறையை பின்பற்ற வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியமைக்க அதிகாரம் வழங்க வேண்டும். நாட்டின் நன்மை கருதி அது நடக்க வேண்டும்.. ஒரு கொள்கை உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு இந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
பாராளுமன்ற வேலைகளை ஒரு பக்கம் வைத்து ஜனாதிபதியுடன் பேசி ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைக்கு முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும். ஜனாதிபதி இதில் விருப்புடன் இருப்பதை என்னால் அறிய முடிந்தது” - என்றார் விஜேதாச ராஜபக்ச.
#சபாநாயகர்- விஜேதாச அவர்களே, உங்களின் யோசனையை நான் ஏற்கிறேன். ஜனாதிபதியுடன் நான் பேச தயாராகவே உள்ளேன். எனக்கு அவருடன் எந்த பிரச்சினையும் இல்லை. இதனை நான் பரிசீலிப்பேன்.
Thanks - R.Sivaraja