வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆரம்ப கட்டமாக 10,000 ரூபா நிதியுதவி வழங்குவதற்கும், நட்டங்களை மதிப்பீடு செய்த பின்னர் அதிகபட்சம் 250,000 ரூபா வரையில் நிதியுதவியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநருக்கும் மாகாண அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பெருமளவு வெள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினமும் தொடர்ந்து இடம்பெற்றது.
தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 18,638 குடும்பங்களைச் சேர்ந்த 60669 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் 37 முகாம்களில் தங்கியுள்ளனர். 26 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 114 வீடுகள் பகுதியளவு சேதமடைந்திருப்பதாக அப்பிரதேசங்களிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் பாதிப்புக்குள்ளாகாதவர்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறுகின்றபோது உணவுகளை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள், சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு உதவும் வகையில் ஆரம்ப கட்டமாக 10,000 ரூபா வழங்குவதற்கும், நட்டங்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் அதிகபட்சம் 250,000 ரூபா வரையில் நிதியுதவியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம் மாவட்டங்களில் சுமார் 8,000 ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையாக வௌளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்காணிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு தலா 40,000 ரூபா நட்டஈடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முப்படையினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் நோயாளிகளை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.