Ads Area

அட்டாளைச்சேனை பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்.

- ஊடகப் பிரிவு -

அட்டாளைச்சேனை நூலகத்தை புதிய கட்டடத்தில் ஆரம்பித்தல், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு ஆகிய நிகழ்வுகள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் ஏ.எல். பாயிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் எஸ்.எல்.எம் பழீல் (பி.ஏ) உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாகவும் திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டிற்கு தேவையான இயந்திரங்களை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்து தர முடியுமெனவும், இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நாட்டின் சகல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து பரிசில்கள் வழங்கியதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்தோடு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் இதன்போது இராஜாங்க அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ஆகியோரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe