கரு ஜெயசூரியவும் சஜித் பிரேமதாசவும் என்னை நம்பாததால் பிரதமர் பதவியை நிராகரிக்கவில்லை. ரணில் குறித்த அச்சத்தின் காரணமாகவே நிராகரித்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள் தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இடம்பெற்றால் மக்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றவைகள் மீள இடம்பெறாத நிலையை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள சிறிசேன மக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய முடியும்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை உருவானால் நான் அவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆராய்வேன். நான் முன்னரும் தெரிவித்திருக்கின்றேன், தற்போதும் தெரிவிக்கின்றேன், எதிர்காலத்திலும் இதனையே தெரிவிப்பேன் - நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பதால் ஒருவர் பிரதமராக முடியும் என அரசமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை. ஜனாதிபதியுடன் விருப்பத்துடனேயே ஒருவர் பிரதமராக முடியும். கரு ஜெயசூரியவும் சஜித் பிரேமதாசவும் என்னை நம்பாததால் பிரதமர் பதவியை நிராகரிக்கவில்லை. ரணில் குறித்த அச்சத்தின் காரணமாகவே நிராகரித்தனர். பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவை கைவிடுவது குறித்து நான் சிந்திக்கவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.