Ansar Cassim
கம்பெரலிய’ என்ற துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைத் தொகுதிக்கு இவ்வருடம் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான எம்.எ.எம். மன்சூர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 51 கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை இனம்காணுதல் மற்றும் முன்மொழிவுகள் சம்பந்தமான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேபோல் இவ்வருடமும் சம்மாந்துறைத் தொகுதியில் 300 மில்லியன் ரூபாய் நிதியில் கிராமிய குளக்கட்டுகள், பாதைகள், பாடசாலை மைதானங்கள், கழிவறை வசதிகள், சந்தைகள், பூங்காக்கள் என்பன அமைக்கப்பட உள்ளதோடு வீடமைப்பு அபிவிருத்தி, சமயஸ்தலங்களின் புனரமைப்பு, வீடுகளுக்கு மின்சாரம் வழங்குதல், காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
எனவே, இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரினதும் பங்களிப்பு முக்கியமானதாகும்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஸீசைனா பாரிஸ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ரி.எம்.சரீம், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


