பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துர மதுஷ் கைது வேட்டையின் பிரதான நடவடிக்கையாளர் என கூறப்படும் அதிரடிப் படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் நோக்கி பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுஷ் மற்றும் அவரது சகாக்களின் கைது விசாரணைகளை நேரில் ஆராய்ந்து ஒத்துழைப்பை வழங்கவே அவர் இந்த அவசரமான பயணத்தினை மெற்கொண்டுள்லதாக தெரியவருகின்றது.
மாகந்துர மதுஷ் கைது விவகாரமானது லத்தீப்பின் தீவிர புலனாய்வு நடவடிக்கைகளின்மூலம் மேற்கொள்ளப்பட்டமை தெரிந்ததே.
பாதாள உலகக் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவரெனக் கருதப்படும் லத்தீப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி உத்தரவின்கீழ் மதுஷ் தலைமையிலான கும்பலைக் கைதுசெய்வதற்காக மிகவும் இரகசியமான முறையில் செயற்பட்டு வந்துள்ளார்.
இதன்படி குறித்த கும்பல் டுபாயில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் லத்தீப் இவ்வாறு திடீர் பயணத்தினை மேற்கொண்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுஷ் உள்ளிட்ட கும்பலை நாட்டுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் நிலையில் இந்த விவகாரத்தின் பிரதான செயற்பாட்டாளராக விளங்கிய லத்தீப்பின் இந்த திடீர் விஜயத்தின்மூலம் மதுஷ் உள்ளிட்டோரை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரியவருகிறது.
எவ்வாறாயினும் அடுத்துவரும் நாட்களிலேயே இதன் முடிவுகள் தெரியவரலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
thanks-ibctamil