By:மாஹிர் மொஹிடீன்
சம்மாந்துறையில் ஒரு கைத்தொழில் பேட்டையை அமைத்து அதில் வேலை தேடி அலைகின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவோம் என்று கடந்த பல வருடங்களாக எமது அரசியல் வாதிகளால் வாக்குறுதி அளித்தது தெரிந்ததே !
சம்மாந்துறையில் இரண்டு பலம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஏன் அது இன்று வரை நடைபெற வில்லை இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நேரம் இது.
முதலில் கைத்தொழில் பேட்டையும் அதற்கான முதலீடுகள் என்ன என்பது பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியம். ஒரு கைத்தொழில் பேட்டையை முதலீட்டாளர்கள் ஒரு ஊரில் நிறுவவேண்டுமென்றால் அதற்கான அனைத்து வசதிகளையும் அந்த ஊர் நிர்வாகம் அமைத்துக்கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே எந்த முதலீட்டாலர்களும் தயக்கமின்றி தங்களது முதலீடுகளை செய்ய முன்வருவர். இதுதான் ஒரு கைத்தொழில் பேட்டை உருவாக்கத்தேவையான அடிப்படை அம்சமாகும்.
இப்போது நமதூரில் ஏன் கைத்தொழில் பேட்டை உருவாவது தடைப்பட்டிருக்கின்றது அதன் அரசியல் பின்னணி என்ன என்பதை இப்போது பார்ப்போம்
முதலீட்டாளர்கள் ஒரு நாளும் அவர்களுக்குத்தேவையான நிலம் மற்றும் சரியான உள்கட்டமைப்பு (Infrastructure) செய்து கொடுக்காவிட்டால் யாருமே நமதூரில் முதலிட வரமாட்டார்கள் இது ஒன்று. மற்றது முதலிடவருபவர்கள் சிங்களவராகவோ, தமிழராகவோ இருக்கலாம் அதை நாம் வரவேற்க வேண்டும். இதுதான் யதார்த்தம். இதை வழக்கம்போல தமது சுயநல அரசியல் லாபத்துக்காக சிங்கள முதலீட்டாலர்களுக்கு இங்கே இடம் கொடுத்தால் சம்மாந்துறையில் முஸ்லிம்கள் வாழமுடியாது காணிகளை இழக்கவரும் என்று ஒரு மாய விம்பத்தை ஊர்மக்களிடம் உண்டு பண்ணி தங்களை ஊர்ப்பாதுகாவலன் என்று காட்டிக்கொண்டு அதை ஒரு நாளும் நிறைவேறாதபடி அரசியல் செய்து ஊரின் வளர்ச்சிக்கு தடை போடும் இவர்களை எப்படி நாம் அழைப்பது ???
கடந்த பாகிஸ்தான் தேசிய தினத்தன்று (மார்ச் 23ம் திகதி) மலேசியப்பிரதமர் மஹதிர் முஹம்மத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சொன்ன அருள்வாக்கை சம்மாந்துறை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாக இங்கே சொல்ல வேண்டிய கடமைப் பாட்டில் சொல்கின்றோம்.
இந்தப் பாகிஸ்தானை ஒரு தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றவேண்டுமென்றால் வெளிநாட்டு முதலீட்டாலர்களைக் கொண்டுவந்து இங்கே தொழிசாலைகளை உருவாக்க முயலுங்கள். அதற்காக முதலீட்டாலர்களுக்கு இலவசமாக நிலத்தையும், அதற்குத் தேவையான சகல வசதிகளையும் அவர்களுக்கு மனமுவர்ந்து வழங்குங்கள் அப்போதுதான் இங்கே வேலையில்லாத்திண்டாட்டத்தை அழித்து நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும் அத்துடன் முஸ்லீம்கள் மட்டும்தான் முதலிடலாம் என்றால் யாரும் வரமாட்டார்கள் முதலீட்டாளர்கள் யாராக இருந்தாலும் அழையுங்கள் அதுதான் மஹதிர் இம்ரானுக்கு சொன்ன "தாரக மந்திரம்"
இன்று நமதூர் மக்களுக்கு அத்தியாவசிமான தேவையாய் இருப்பது "வேலை' அதை இப்படி ஒரு கைத்தொழில் பேட்டையை உருவாக்கி நிறைவேற்றுவதை விட்டுவிட்டு "அபிவிருத்தி மழை" என்ற பெயரில் வெறும் அடிக்கல்களை நாட்டுவதிலும், வெறும் கிராபிக் வீடியோக்களை உருவாக்கி அதில் அதை செய்வோம். இதை செய்வோம் என்று ஒன்றையும் உருப்படியாக செய்யாமல் வாக்கு வாங்க வருபவர்களை இனம் காண்போம்.


