அமெரிக்கப் படைகளை இலங்கைக்குள் களமிறக்கப்படவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
'இலங்கைக்குள் எந்தவித சர்வதேச இராணுவ படைகளும் களமிறக்கப்படவில்லை, குறிப்பாகஅமெரிக்காவின் இராணுவப்படைகள் இலங்கைக்குள் குவிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கு சில புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.
எமது பாதுகாப்பு படையினர் மாலி தீவுகளுக்கு அனுப்பப்படவுள்ள காரணத்தினால் எமது இராணுவ வாகனங்கள் சில பரிசோதிக்கப்பட்டு வருகின்றன . இந்த வாகனங்கள் அனைத்துமே எமக்கு ஐக்கிய நாடுகள் அமைதிப்படை மூலமாக வழங்கப்பட்ட வாகனங்கள். அவற்றையே நாம் பரிசோதனை செய்து தயார்படுத்தி வருகின்றோம். அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டே சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.
எனினும் அமெரிக்க இராணுவ படைகளை இலங்கைக்குள் கொண்டுவரவில்லை. அவர்கள் வருவதாக கோரவும் இல்லை. இலங்கையில் தற்போது நிலவும் பதற்றமான நிலைமைகளை கையாள எமது முப்படையினர் மற்றும் பொலிஸ் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலைமைகளை வழமைக்கு கொண்டுவந்துள்ளோம்.