மஹிந்த முதல் தடவையாக பிரதமர் ஆசனத்திலிருந்து ஜனாதிபதி ஆசனத்தை நோக்கி தேர்தலில் களமிறங்குகிறார். நாட்டில் விடுதலை புலிகள் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். வடக்கும்,கிழக்கும் இரத்த கரை படிந்து கிடக்கிறது. நாட்டின் பொருளாதாரம் சிதைவுண்டு கிடக்கிறது. முஸ்லிம் உம்மத்தின் தலைவராக இருந்த அஸ்ரப் காலமானதை தொடர்ந்து ஹக்கீம் அவர்களின் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்கிறது. மஹிந்த எனும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக களம் கண்ட முஸ்லிம் சமூகம் தேர்தல் வாக்குறுதிகளை நம்பாது வெற்றிலையை நிராகரித்து யானையின் முதுகில் பயணிக்கிறது.
மட்டக்களப்பில் ஒருவர்,அக்கரைப்பற்றில் ஒருவர் மஹிந்தவின் போக்குக்கு வீதி காட்டுகிறார்கள். புலிகளின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டி பலமுயற்சிகள் தோற்றும்,வென்றும் காலம் கடக்கிறது. வடகிழக்கு வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டாக உடைகிறது. வெளிநாட்டு, பேச்சுவார்த்தைகள் பல செய்திகளுடனும், பிரியாணியுடனும் களைந்து செல்கிறது. உள்நாட்டு யுத்தம் சுத்தமாக முடிகிறது. இலங்கை இராணுவத்தை உலகம் பாராட்டுகிறது, தோல்வியின் வலியால் சதிகாரர்கள் துடிக்கிறார்கள். சர்வதேச விசாரணை, வேண்டும் கத்தரிக்காய் பொரியல் வேண்டும் என்றெல்லாம் எலிப்பொந்தில் அமர்ந்து கொண்டு அறிக்கைகள் வருகிறது.
யுத்தம் முடித்து வீரனாக நின்ற மஹிந்த மீண்டும் ஜனாதிபதி எனும் இலக்குடன் களத்தில் கால்பதிக்கிறார். படுபாதாள பள்ளத்தில் கிடந்த யானை தனது உடம்பின் சுமைகளுடன் மேட்டில் எற முடியாமல் தவிக்கிறது. களத்தில் உயிரை கொடுத்து போராடிய சரத் பொன்சேகாவை அன்னத்தில் அழைத்துவந்த மாவீரர்கள் இலங்கை முஸ்லிங்கள் என்பதுதான் உண்மை !!
யுத்தத்தில் இருந்த நாட்டை மீட்டு நள்ளிரவு இரண்டு மணிவரை மக்கள் திரளை கூட்டி மஹிந்தவுக்கு ஏசும் அளவுக்கு நாட்டில் நிம்மதியை கொடுத்த மஹிந்தவை மீண்டும் அதே அணி ஆதரிக்க எதிர்த்த அணி மீண்டும் எதிர்க்க பழைய படம் புதிய திரையில் ஓடுகிறது. எங்கள் சின்னம் அன்னம், வெற்றி திண்ணம், என்ற கோசம் தேர்தல் முடிவில் தோற்று மீண்டும் மஹிந்த அலை அடிக்கிறது. அமோக வாக்குகளுடன் வெற்றியை சுவைக்கிறார் மஹிந்த. வயல்கடைகளில் பீடீயை புகைத்துக்கொண்டு பெட்டிமாத்தி மஹிந்த வேண்டுட்டான் என தம்மை தாமே ஆசுவாசப்படுத்திய அஷ்ரபின் காக்காமாருக்குத்தான் மஹிந்த கொடுத்த முதல் வெகுமதி பசளை மானியம்.
ஆசியாவின் ஆச்சரியம் மஹிந்த சிந்தனையில் உதயமாகிறது. வடக்கில் வசந்தம் வீச கிழக்கில் நவதோயம் ஆரம்பிக்கிறது. ஒழுங்கைகள் கொங்கிரீட் வீ திகளாக மாற காபட் பெருந்தெருக்களால் இலங்கை இணைகிறது. கருணா அம்மன் அமைச்சராகிறார். போராளிகள் புனர்வாழ்வு பெறுகிறார்கள். கிழக்கின் முதல்வராக பிள்ளையான் அழகுசேர்க்கிறார். மஹிந்த சிந்தனை நாட்டில் குசும்பாக மலர்கிறது. நாட்டு மக்கள் நிம்மதியாக தேசியதினங்களை கொண்டாடுகிறார்கள். தைபொங்கலில் முஹம்மது வீட்டிலும் , பெருநாளில் குமாரின் வீட்டிலும் விசேஷமாகிறது. ஒற்றுமை ஓங்குகிறது. நாடுகடந்த புலிகளுக்கு தலையிடி ஆரம்பிக்கிறது.
சாதுக்கள் மிரள்கிறது, விகாரைகளில் இருந்து சாரை பாம்புகள் வெளியாகிறது, சேனாக்கள் உதயமாகிறது, ஊடகங்கள் உளர்கிறது நாட்டில் நடப்பதை சுதாகரிக்க முன்னர் பல சம்பவங்கள் நடந்து முடிகிறது. மஹிந்தவை ஏசி திரிந்து மீண்டும் அமைச்சரான எமது எம்.பிக்களும் காங்கிரஸின் தலைவர்களும் ஊடக அறிக்கையில் உலக சாதனைக்கு முயறசிக்கிறார்கள். அடி பலமாக விழுகிறது. ரமழானில் கிறிஸ் மனிதன் பாய்கிறான். சஹாரில் நிம்மதியில்லை. இப்தாரில் இறைஞ்சிக்கிறோம்....
குனுத் ஓத மட்டும் நாங்கள் மறக்கவில்லை. மஹிந்த ஆட்சி மோசம் எனும் முடிவுக்கு வருகிறோம். சக்தியின் நியூஸ் பர்ஸ்ட் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. ஊடக யுத்தம் ஆரம்பமாகிறது. மஹிந்த ஆட்சிக்கு பல பக்கத்திலிருந்தும் கண்டனங்கள் வலுக்கிறது. உள்நாட்டில் முஸ்லிங்களுக்கு பாதிப்பாக இருந்தாலும் சர்வதேச அளவில் முஸ்லிங்களுக்கு எதிரான வன்முறைக்கு மஹிந்த அரசு உரத்து குரல்கொடுக்கிறது. பலஸ்தீனுக்கு ஆதரவாக மஹிந்த கையெழுத்திடுகிறார். பள்ளிகள் உடைக்கப்படுகிறது. சுதாகரிக்க முன்னர் ஹீரோ மஹிந்த ஸீரோ ஆகிறார். முஸ்லிங்களுக்கு வில்லனாகவும் மாறுகிறார். கோத்தா பொதுபல சேனா அலுவலகம் திறந்தது சர்ச்சையாகிறது.
நாட்டில் 30 வருடங்கள் யுத்தம் நடந்தது அப்போது பலரும் பலகோணத்திலும் யுத்தம் செய்தார்கள், பல மனித வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது அப்போது ஹபாயாவை மஹிந்த ஏன் தடைசெய்ய வில்லை? முஸ்லீம் பெண்களின் முகம் மூடும் கலாசாரத்தை ஏன் அவர் மறுக்கவில்லை ? அரச அலுவகத்தில் ஹபாயாவை தடைசெய்து அரச சுற்றுநிரூபம் வெளியிடாமை ஏன்? கற்பிணி போல வந்த மனித வெடிகுண்டுகளை கண்டு பயந்து தினம் ஒரு அரச சுற்றுநிருபம் வெளிவராமை ஏன்? சிந்தியுங்கள்.
ஒரே நாளில் பல்லாயிரம் அரச தொழில் வழங்கிய அரசை நாம் ஏன் வீழ்த்தினோம் ? தமிழ் மக்கள் மஹிந்தவை எதிர்க்க காரணம் பலவற்றை நாடுகடந்த தமிழீழ அரசு வடிவமைத்துள்ளது. முஸ்லிங்கள் சோடா போத்தலை போன்றவர்கள் எனும் உண்மை உங்களுக்கு தெரியுமா? உணர்ச்சி வசப்படுவதில் முஸ்லிங்களுக்கு நிகர் முஸ்லிங்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அந்த பாதையில் தான் சதிவலை பின்னப்பட்டது.
பள்ளிகள் உடைக்கப்பட்ட போது எமது தலைவர்களில் ஒருவர் தான் நீதிக்கு பொறுப்பானவர் என்பதை நாம் மறக்க கூடாது. வடக்கில் முஸ்லிங்ககளை மீள் குடியேற்றிய பெருமை மஹிந்த ஆட்சியையே சாரும். வில்பத்தை காடாக அந்த அரசு அறிவிக்கவில்லை என்பதை நாம் மறந்து விட்டோம்.
பிரியாணி தரும் நீங்கள் வாக்கு மட்டும் தரமாட்டிர்கள் என பகிரங்கமாக மஹிந்த கூறும் அளவுக்கு முஸ்லிங்களை அவர் படிக்கிறார். காலத்தால் பின்னிய சதிவலையில் கண்களை மூடிக்கொண்டு முஸ்லீம் சமூகம் வீழ்கிறது. சர்வதேசத்தின் சகல அஜந்தாக்களுக்கும் தலையசைக்க மஹிந்த மறுக்கிறார். அமெரிக்கா சொல்வதெல்லாம் செய்ய அவருக்கு விருப்பமில்லை. புலிகளை உருவாக்கி தீனி போட்டு ராஜ வாழ்வு வாழ்ந்த நாடுகளுக்கு அவரின் செயல்கள் தலையிடியாக மாறுகிறது. கிழக்கு துறைமுகம் எனும் கனவில் மிதந்த நாடுகளுக்கு கனவை நனவாக்குவதில் சிக்கல் வருகிறது. எதிரிகள் எல்லோரும் ஒன்றாகி சிந்திக்கிறார்கள்.
சர்வதேச விசாரணை எனும் சிறைக்குள் மஹிந்த அகப்படுகிறார் . இலங்கை இராணுவத்தை பாதுகாக்க போராடுகிறார். சம்பிக்கவும்,ராஜிதவும் மிரட்டுகிறார்கள். உயரிய கௌரவம் பெற்ற சாதுக்களை அடக்க முடியாமல் தவிக்கிறார் மஹிந்த. பலப்பக்கமும் பல நெருக்கடிகளுடன் விழிபிதுங்கி தவிக்கிறார். சுதாகரிக்க முன்னர் இலங்கையின் சில பகுதிகள் தீக்கிரையாகி கிடக்கிறது. முஸ்லீம் சோடாப் போத்தல்களை ஊடகங்கள் திறந்து விடுகிறது. வாயுக்கள் பீச்சி கொண்டு கொந்தளிக்கிறது முஸ்லிம் சோடாப்போத்தல்கள். நாடுகடந்த தமிழீழ அரசின் இலக்கு முதல் எல்லா அந்நியசக்திகளின் இலக்கும் வெல்கிறது. மஹிந்த ஆண்ட இலங்கை தன்னை அறியாமல் தோற்று நிற்கிறது.
நல்லாட்ச்சி எனும் திரைக்காவியம் தொடரும் .....
நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு