பொய்யான செய்திகளை காழ்ப்புணர்ச்சி கொண்ட ஊடகம் வெளியிட்டுள்ளது : அல்தாப் ஹோட்டல் உரிமையாளர்.
-அபு ஹின்சா -
14 வருடங்களாக இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தை மட்டுமின்றி சர்வதேச பிரமுகர்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை நல்ல வரவேற்பை பெற்ற எனது அல்தாப் ஹோட்டல் அண்ட் ரெஸ்டுறேன்ட் மீது அபாண்டமான குற்றச்சாட்டை ஒரு இனவாத இணையமும், சில காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் சகோதரர்களும் முன்வைத்திருப்பதாக அல்தாப் ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம்.அமீர் தெரிவித்தார்.
மேலும் தனது அறிக்கையில்,
அண்மையில் எனது உணவகத்தில் பழுதடைந்த கோழியை வாடிக்கையாளருக்கு சாப்பிட வழங்கியதாகவும், அது உண்பதற்க்கு தகுதியில்லாமல் இருந்ததாகவும் குற்றம் சுமத்தி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருந்தது. அந்த நாடகமானது இந்த நாட்டில் இனவாத்தைத்தை உருவாக்க முழுமூச்சாக செயட்பட்டுவரும் ஜேவிபி நியூஸ் எனும் இணையதளத்தில் எங்கள் மீது கரிபூசும் செயலாக வெளியிடப்பட்டிருந்தது.
அந்த ஜேவிபி நியூஸ் எனும் இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்தபோது அதிலிருந்த ஒரு கோழித்துண்டு பழுதாகியிருந்ததாகவும் அதனை சுட்டிக்காட்டியபோது கடை ஊழியர்களும், நிர்வாகவும் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் அந்த செய்தியில் வெளியிட்டுள்ள வீடியோ அவர்களின் சகல கூற்றையும் பொய்ப்பிக்கிறது.
மதுபோதையில் வந்து எங்கள் கடையில் பிரச்சினை செய்த அந்த நபர்கள் சுமார் ஒரு மணிநேரத்துக்கு முன்னர் வந்து வாங்கிச்சென்ற கோழித்தூண்டும் அவர்கள் திருப்பி கொண்டுவந்த கோழித்தூண்டும் வித்தியாசமானது. அவர்கள் குடும்பத்துடன் உணவருந்தியதாக சொல்கிறார்கள் ஆனால் அந்த வீடியோவில் நன்றாக தெரிகிறது அவர்கள் வீதியில் இருந்தே வீடியோ செய்துகொண்டு வருகிறார்கள். அவர்கள் கடையில் உணவருந்தவும் இல்லை. குடும்பசகிதம் வருகை தரவும் இல்லை.
எங்கள் தயாரிப்பில் குறைகள் இருப்பின் அதனை பொதுசுகாதார பரிசோதகர், சுகாதார நிறுவனங்கள், பொலிஸார் போன்றோரிடம் முறைப்பாடு செய்திருக்க வேண்டும் அதுவுமில்லாமல் வீதியில் பாதுகாப்புக்கு நின்ற இலங்கை ஆர்மி படை வீரர்களிடம் முறையிட சென்றது ஏன்? எனும் கேள்விக்கு விடைதேடினாலே இவர்களின் நிகழ்ச்சிநிரல் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.தர நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை கொண்டு தயாராகும் எமது உணவுப்பண்டங்களை பரிசோதிக்கும் வேலையை செய்வது பொதுசுகாதார பரிசோதகர்களா?அல்லது, சுகாதார நிறுவனங்களா? இல்லை வீதியில் பாதுகாப்புக்கு நின்ற இலங்கை ஆர்மி படை வீரர்களா?
காழ்ப்புணர்ச்சியும்,வக்கிரமும் கொண்ட இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறு குறித்த செய்திகளை வெளியிட கூடாது என ஜேவிபி நியூஸ் எனும் இணையதளத்தை கேட்டுக்கொள்கிறேன். என மேலும் தனது மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளார்.