* உலமாக்களை இந்நாட்டிலிருந்து வெளியேற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை..!
* உலமா சபைக்கு 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பு..!
* சிங்கள அரசை அமைப்போம்; பாராளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம்..!
* இது சிங்களவர்களின் நாடு; தமிழர்கள் கோபிக்கக் கூடாது..!
இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டிலிருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான் கூறி வைக்க விரும்புகிறேன் என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (07) பிற்பகல் நடந்த கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
சம்பிரதாய முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கிறார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்து கொண்டோம். கடந்த காலங்களில் விட்ட எச்சரிக்கைகளை பற்றி பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும்.
இன்று ஒரு பக்கம் சோபா ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது. மறுபக்கம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் செயற்பாடுகளும், இன்னொருபக்கம் பலம்வாய்ந்த உலக நாடுகளின் புலனாய்வுச் சேவைகள் நமது நாட்டை கூறுபோட செயற்படும் நடவடிக்கைகள் போன்ற பல பிரச்சினைகள் உள்ளது.
இது சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள் தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கெளரவமான இனம் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
நாம் உலமா சபையுடன் கவனமாக இருக்க வேண்டும். உலமாக்களுடன் பேசுவதை அரச தலைவர்கள் நிறுத்த வேண்டும். சுபி முஸ்லிம்கள் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். அல்-தக்கியா என்ற போர்வையில் உலமா சபை செயற்படுகிறது.
உலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளது. அவர்கள் இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர். 4 அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளனர். இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குரான் உள்ளது.1950 ஆம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்ட ஒரு குர்ஆன் உள்ளது. அந்தக் குர்ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
அரசுக்குள்ளே அரசு, சட்டத்திற்குள்ளே சட்டம், நீதிமன்றத்திற்கு வெளியே காதி சட்டம், வெவ்வேறான சட்டங்கள் உள்ளன. எந்த அரசு வந்தாலும் வஹாபிவாதிகள் அதில் உள்ளனர். அட்டுளுகமவில் இன்று தப்லீக் ஜமாத் செயற்படுகின்றது. தலைக்கு மேலே பறந்து சென்றாலும் தலையில் கூடு கட்ட நாம் விட மாட்டோம்.
இனத்துக்கு தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் கலப்பற்ற தலைவன் எமக்கு வேண்டும். ஜனநாயகத்தின் காப்பரணான பாராளுமன்றத்தில் செயற்படும் ஒருவர் தேவை. சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை. அது நமக்கான பாராளுமன்றமாக மாற வேண்டும்.
காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம். நாட்டில் 10 ஆயிரம் விகாரைகள் உள்ளன. 7 ஆயிரம் விகாரைகளை நாம் ஒன்று சேர்த்தால் பிரிவினைகளை மறந்தால் நாம் எதிர்பார்க்கும் வாக்குகள் கிடைக்கும்.
நாங்கள் கல்வி பயின்று அனுபவத்துடன் தான் வந்துள்ளோம். எங்களால் இந்த நாட்டை நல்ல இடத்திற்கு கொண்டு செல்லலாம். 70 வருடம் இந்த நாட்டை வீணாக்கியவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. ஆனால் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும்.
இன்று சிங்களவர்கள், சிங்களவர்களாக இருக்க வைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும்.