பாறுக் ஷிஹான்
மருதமுனை நற்பிட்டிமுனை பெரியநீலாவணை இணைந்த பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சந்திப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மருதமுனை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தகர்கள் பல கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (28) இரவு 8 மணியளவில் மருதமுனை பொதுநூலக கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம் றஹீப் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கையில்
பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனான சந்திப்பு, எல்லை நிர்ணய குழுவுடனான சந்திப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு, மற்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனான சந்திப்பு என்பன பற்றி மேற்படி குழுவினருக்கு விளக்கிக் கூறினார்.
மேலும் சமகால அரசியல் அதாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு தரும் அழுத்தம் தொடர்பிலும் சபைக்கு எடுத்துக் கூறினார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கல்முனை தோப்பூர் வாழைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் இறுதித் தீர்வுக்கு வருதல் திகன மினிவாங்கொட குருநாகல் பிரதேசங்களில் இனவாத தாக்குதலினால் பாதிக்கப்ட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கல் சமூகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் பட்சத்தில் மாத்திரமே அமைச்சுப் பதவிகளை ஏற்பது என்ற தீர்மானத்தையும் சபைக்கு தெரிவித்தார்.
அத்துடன் அமைச்சுப் பதவிகளை முஸ்லீம் அமைச்சர்கள் ஏற்கின்ற போது முன்னாள் இராஜாங்க அமைச்சரான எச்.எம்.எம்.ஹரீஸை குறித்த பதவியேற்பினை மறுபரீசீலனை செய்யுமாறு கேட்ட சபையினரின் கோரிக்கையை மீள்பரீசீலனை செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்தில் தெரிவித்தார்.