கினாந்திமுனை நினைவு
மூதூர் மக்கள் வெளியேற்றம்
13 ஆண்டுகள் நிறைவு
2006.08.04 ~ 2019.08.04
மூதூர் முஸ்லிம்கள் மூதூரை விட்டு வெளியேறிவிட வேண்டும். வெளியேறத் தவறினால் இரத்த ஆறு ஓடும் என 29.05.2006 அன்று புலிகள் துண்டுப்பிரசுரம் மூலம் மக்களை அச்சுறுத்தியிருந்தனர். பின்னர் வழமைபோலவே அப்பிரசுரத்துக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என மறுத்தனர்.
அதேநேரம் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வெளியேற வேண்டாம், நாம் பூரண பாதுகாப்புத் தருவோம் என 01.06.2006 அன்று மூதூர் இராணுவம் ஓர் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட தோடல்லாமல் அதனை ஒலி பெருக்கி மூலமும் அறிவித்தது. தாம் செய்யும் தவறுகளை உடன் மறுப்பதும் பின்பு அதனை ஏற்பதும் கடந்த 25 வருடங்களாக புலிகள் காட்டிவரும் ஒரு முரண் நடத்தைக் கோலமாகும்.
முஸ்லிம்களை தாக்கும் நோக்கமோ, அவர்களை வெளியேற்றும் நோக்கமோ புலிகளிடம் இல்லையெனின் அவர்கள் நேரடியாக இராணுவ முகாம்களை தாக்கியிருக்க முடியும். ஆனால் புலிகளோ மின்சாரத்தை துண்டித்து விட்டு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து குடியிருப்புப் பிரதே சங்களுக்குள் நின்று கொண்டு மக்களையும், அவர்களது சொத்துக்கள், வாழிடங்கள் என்பனவற்றையும் கேடயமாகப் பாவித்து இராணுவத்தை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தினர். புலிகள் திட்டமிட்டு எதிர்பார்த்தது போலவே ஷெல் வந்த திசையை நோக்கி இராணுவம் சராமாரியான ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது.
தாக்குதல்கள் ஆரம்பமானதைத் தொடர்ந்து மக்கள் பாடசாலைகளிலும் சமயத் தலங்களிலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்த ஷெல் தாக்குதல்களினால் பொதுமக்களுக்கு பாரிய உயிர், உடமை இழப்புக்கள் ஏற்பட்டன. தொடர்ந்தேர்ச்சியான ஷெல் தாக்குதல்களினால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயோதிபர், நோயாளிகள் வலது குறைந்தோர் உட்பட தஞ்சமடைந்திருந்த மக்கள் பட்டினிச் சாவுக்கு இட்டுச் செல்லப்பட்டனர். மேலும் மரணமானோரை உடன் நல்லடக்கம் செய்யவோ காயப்பட்டோருக்கு மருத்துவம் அளிக்க அவகாசமோ, மருந்தோ இல்லாமல் போனமையினால் பலர் மருந்தின்றி இரத்தப் பெருக்கினால் பரிதாபகரமாக இறந்தனர்.
குறுகிய இடத்தில் நிரம்பி வழிந்த மக்கள் பிணங்களுடனும் காயமடைந்தவர்களுடனும் தஞ்சம் புகுந்தவேளை அவ்வடைக்கலத் தலங்களுக்கு அருகில் வந்த புலிகள் அங்கிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்து மேலும் இராணுவத்தைத் தாக்கினர்.
மூதூர் நத்வதுல் உலமா அரபிக் கல்லூரியினுள் சேர்ந்திருந்த மக்களின் நெரிசல் காரணமாக கல்லூரியைச் சூழவுள்ள வீடுகளிலும் மக்கள் தங்கியிருந்தனர். அவ்வேளை மர்க்கஸ் ஜங்ஸனில் நின்ற புலிகள் இராணுவத்தை தாக்கியபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக பல ஷெல்கள் சமகாலத்தில் அறபுக் கல்லூரியை சூழ வந்து விழுந்தன. இதனால் அங்கு தங்கியிருந்த சிவிலியன்கள் ஆங்காங்கு கொல்லப்பட்டனர். இதில் ஒரு வீட்டினுள் தஞ்சம் புகுந்த 15 பேர் பாதிக்கப்பட்டனர்.
இடைவிடாத இருதரப்பு ஷெல் பரிமாற்றங்கள் எம்மை ஊரைவிட்டு வெளியேறச் சொல்கிறதா? என்ற வினா மக்கள் மத்தியில் தோன்றியது. எனவே முற்றாக அழிவதை விட ஊரை விட்டு வெறிவேறுவதே உசிதமானது என முடிவெடுத்த மக்கள் 04.08.2006 காலையில் ஊரை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அதேநேரம் நேரே சென்றால் அப்பாதையில் தாம் கண்ணி வெடி புதைத்து வைத்திருப்பதாகவும் மீறிச் சென்றால் முழங்கி விடலாம் என அச்சுறுத்தி, முட்களும் கற்களும் நிறைந்த பாதையினூடாக அழைத்துச் சென்றனர். மூன்றாம் கட்டை மலையின் கிழக்குப் புறமாக உள்ள கிணாந்தி முனைப் பிரதேசத்தில் கொதிக்கும் வெயிலில் மக்கள் அனைவரையும் நிற்கவைத்து கனரக ஆயுதம் தரித்த புலிகள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
பின்பு ஆண் புலிகளும் பெண் புலிகளும் பொதுமக்களை ஆண்கள் வேறு பெண்கள் வேறாகப் பிரித்து நிறுத்தினர். இதனிடையே உயிர்போகும் அளவுக்கு ஏற்பட்ட தாகத்தை தீர்க்க நீர் அருந்த விடவில்லை. மக்கள் சிறு பள்ளங்களில் தேங்கியிருந்த மிகவும் அசிங்கமான அசுத்த நீரை குடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மர நிழலில் ஒதுங்கவோ குழந்தைகளுக்கு பால் கொடுக்கவோ அனுமதிக்கவில்லை. வரிசையில் நிற்கத் தவறியவர்களுக்கு வெல்லங் கம்பினால் அடித்ததுடன் இனத்தை இழித்துரைத்தும் ஏசினர்.
இந்நிலையில் மூதூரில் உள்ள ஆண்களுள் சுமார் 13 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களை வேறுபிரித்து அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொலை செய்து விடும் திட்டத்தை நடை முறைப்படுத்தத் தொடங்கினர். ஆண்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த புலிகள் தமக்குத் தேவையான இளைஞர்களை துப்பாக்கி முனையில் வேறுபிரித்தனர். ஏனைய புலிகள் அவ் இளைஞர்கள் அணிந்திருந்த மேலாடைகளால் கையை பின்னே வைத்து பிணைத்துக் கட்டினர்.
மனைவி, தாய், தந்தை பிள்ளைகள், சகோதரர்கள் ஊரவர், உறவினர்கள் பார்த்திருக்க அவர்களது கண்முன்னே சுமார் 60 மீற்றர் தூரத்தில் வைத்து இளைஞர்களை சுட்டுக் கொல்லத் தொடங்கினர்.
அந்தநேரம் பார்த்து அவ்விடத்தில் பல ஷெல்கள் வந்து முழங்கின. இதனால் பல பொதுமக்களும் புலிகளும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனையோர் சிதறியோடினர். அவ்வாறு ஓடியோர் கிழக்கே இருக்கும் சதுப்பு நிலத்திற்கூடாக ஓடியதில் சேற்றில் புதையுண்டனர். பின்னர். அவர்களது எலும்புக் கூடுகள் சேற்றிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டன. மேலும் அப்பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்படும் வாய்ப்பை இழந்தன.
பின் கால்நடையாகவும் வாகனங்களிலும் மக்கள் அதிகளாக கந்தளாய்க்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றனர். அங்கு சென்ற மக்களை கந்தளாயில் தரிக்க விடாமல் கிண்ணியாவுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டனர். எனினும், மக்கள் கந்தளாயிலேயே தங்கினர். அகதிகளாக வந்த மக்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுதல் வேண்டும்.
ஆனால் அகதிகளுக்கு அரசாங்க அதிபர் சமைத்த உணவு வழங்க எந்த ஏற்பாடும் செய்யாது அகதிகளது உரிமையை மீறினார். ஏற்கனவே தமது சொந்த இடங்களில் வாழும் உரிமையை புலிகள் பறித்திருக்க அரச அதிபரோ அகதிகளது உரிமையை மீறினார்.
முஸ்லிம்கள் இந்நாட்டின் பிரஜைகள். தொன்று தொட்டு இந்நாட்டுக்கு விசுவாசமாகவும் நாட்டின் ஒருமைப்பாடு, பொருளாதார விருத்தி என்பனவற்றிற்கு உறுதுணையாகவும் வாழ்ந்து வருபவர்கள். நாட்டுக்குள் பிரிவினையை விரும்பாத முஸ்லிம்கள் புலிகளது பிரிவினைக் கோரிக்கைக்கு இணங்க மறுத்தமையே புலிகள் முஸ்லிம்களை அழிப்பதற்கு பிரதான காரணம் ஆகும். முஸ்லிம்களது இந்நிலைப்பாடுதான் நாடு இன்றளவும் பிளவு பாடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆக பிரிவினையை விரும்பாத, தேசிய ஒருமைப்பாட்டை நேசிக்கும் முஸ்லிம்களுக்கு இருதரப்பு ஷெல் தாக்குதலில் பின்வரும் இழப்புகள் ஏற்பட்டன.
01. கொல்லப்பட்டோர் - 54 பேர்
02. படுகாயப்படுத்தப்பட்டோர்- 196 பேர்
03. காணாமல் போனோர் - 05 பேர்
04. மனநிலை பாதிக்கப்பட்டோர்- 24 பேர்
05. பகுதியளவில் அழிக்கப்பட்ட வீடுகள்- 1425 பேர்
06. முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகள்- 286
மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்பு அவர்களது 99% மான வீடுகள் கொள்ளையடிக் கப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கந்தளாய்க்கு அகதிகளாகப்போன மக்களை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தனியாரும் பராமரித்தனர். இப்பராமரிப்பு பணியில் அரசைவிட அரசசார்பற்ற நிறுவனங்களினதும் பொதுமக்களினதும் பங்களிப்பே பாரிய அளவினதாகும்.
மூதூர் முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதை புலிகளுக்கு எதிராக பிரச்சாரப்படுத்து வதில் அரசு எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் அளவுக்கு அகதிகளைப் பராமரிப்பதில் எடுக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின்பு மூதூரில் இயல்பு வாழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறி மூதூர் மக்கள் மூதூருக்கு திரும்புமாறு கேட்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் மூதூர் மக்கள் சார்பாக மூதூர் மஜ்லிஸ் அஷ் ஷூறா பின்வரும் வேண்டுகோள்களை அரசாங்கத்திடம் முன்வைத்தது.
01. மூதூரின் எல்லைகளில் பலமான பாதுகாப்பு போட வேண்டும்.
02. இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் இடமாக மூதூர் இருக்காது என இரு தரப்பும் உறுதி கூற வேண்டும்.
03. மூதூரில் உள்ள 99% வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ள படியால், மீளக் குடியேற முன்பு குடும்பம் ஒன்றுக்கு தலா 25,000/- ரூபா வழங்க வேண்டும்
04. விவசாயம், மீன்பிடி, வியாபாரம், காட்டுத்தொழில் என்பன வெளியேற்றத்திற்கு முன்பே தடைப்பட்டிருந்தபடியால், மேற்படி தொழில்களை சுதந்திரமாக அச்சமற்று மேற்கொள்ளும் வரை குறைந்தது 06 மாதங்களுக்கு நிவாரணம் தரவேண்டும்.
05. மரணித்தோர் பெயரில் 100,000/- ரூபாவும் காயப்பட் டோருக்கு 75,000/- ரூபா வழங்குவதோடு, அழிந்த வீடுகளை விரைவில் புனரமைப்புச் செய்து தரவேண்டும்.
06. முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சமகாலத்தில் மீளக் குடியேற்றப்படல் வேண்டும்.