Ads Area

பெற்ற தாயின் உடலை குப்பை தொட்டியில் வீசிச் சென்ற மகன்.

தூத்துக்குடியில், இறந்துபோன தாயின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால், அவரது உடலை மகன் குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி தனசேகர் நகர் பகுதியைச் சேர்ந்த முத்து லெட்சுமணன் என்பவர் புரோகிதராக வேலை செய்து வருகிறார். இவரது தந்தை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 

இதன் காரணமாக, முத்து லெட்சுமணன் தனது தாய் வசந்தியுடன் வசித்து வந்தார். போதிய அளவு வருமானம் இல்லாததால், அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட வசந்தி, போதிய சிகிச்சை அளிக்காததால் வீட்டிலேயே மரணமடைந்தார். 

தாய் உயிரிழந்து விட்டதால், என்ன செய்வதென தெரியாத முத்து லெட்சுமணன், இறுதிச் சடங்குக்குக் கூட கையில் காசு இல்லாததால், தாயின் உடலை, அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் கொண்டு போட்டுள்ளார். குப்பையை சேகரிக்கச் சென்ற தொழிலாளர்கள் இதை பார்த்து, சிப்காட் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்தான்  பெற்ற மகனே தாயின் சடலத்தை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது. இதை அறிந்த கிராம மக்கள், வசந்தியின் இறுதிச் சடங்குக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளனர். 


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe